பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை! - மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்!
கேரள முன்னாள் முதல்வர் வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது...
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் இல்லத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
கனிமவள நிறுவனத்துடன் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனுக்குச் சொந்தமான கண்ணூர், திருவனந்தபுரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் இன்று (மே 27) காலை முதல் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனைகள் அனைத்தும் மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறி பல்வேறு முக்கிய தலைவர்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறப்பட்டதாவது:
“கேரள மாநில முன்னாள் முதல்வரும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான தோழர் பினராயி விஜயனின் இல்லத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை என்ற பெயரில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து மத்திய அமைப்புகளை பயன்படுத்தும் பாஜகவின் நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்கும் இழிசெயலில் ஈடுபட்டு வரும் பாஜக அரசின் அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, மூத்த தலைவர் பிருந்தா கராத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் அசோக் தாவ்லே, விஜூ கிருஷ்ணன், மரியம் தாவ்லே உள்பட அகில இந்திய தலைவர்களும் தில்லி காவல் துறையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கைகளை கண்டித்து மாநிலம் முழுவதும் உடனடி கண்டன இயக்கங்களை நடத்துமாறு கட்சி அணிகளுக்கு மாநில செயற்குழு அறைகூவல் விடுக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.