பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: முதல்வர் கண்டிக்க மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்
பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டதை முதல்வர் விஜய் கண்டிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
கேரள மாநில முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டதை தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் கண்டிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கனிமவள நிறுவனத்துடன் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனுக்குச் சொந்தமான கண்ணூர், திருவனந்தபுரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் புதன்கிழமையில் (மே 27) சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், இந்தச் சோதனை நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் மத்திய சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் நடத்தினர்.
Advertisement
Advertisement
போராட்டத்தின்போது, செய்தியாளர்களுடன் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா பேசியதாவது, "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவரும் கேரளத்தின் முன்னாள் முதல்வருமான பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. வாடகை வீட்டில் வசித்து வரும் பினராயி விஜயனின் வீட்டிலும், அவர் சார்ந்த 12 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் ராகுல் காந்தியும் (காங்கிரஸ்) சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அவமானப்படுத்துவதற்காகவும் அரசியல் பழிவாங்கலுக்காகவும் நடத்தப்பட்ட சோதனையே. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
அதுமட்டுமின்றி, இந்தச் சோதனைக்கு எதிராக மார்க்சிஸ்ட் நடத்திய போராட்டத்தில், ஒரு தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபியை காட்டுமிராண்டித்தனமாக கைது செய்துள்ளனர்.
குறிப்பாக, பினராயி விஜயனை அரசியல்ரீதியாகப் பழிவாங்கும் நோக்கத்தோடு, ஆர்எஸ்எஸ் - பாஜக மற்றும் மோடி - அமித் ஷாவும் சேர்ந்து, அமலாக்கத் துறையை வைத்து இம்மாதிரியான அவதூறு நடவடிக்கையை முன்னெடுத்திருக்கின்றனர்.
இதற்கு எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கண்டித்துள்ளனர். தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய்யும், இதனைக் கண்டிக்க வேண்டும்.
மத்திய அரசின் ஏவல் அமைப்புகளாக அமலாக்கத் துறை, சிபிஐ செயல்படுவதை முதல்வர் விஜய் கண்டிக்க வேண்டும். அரசியலமைப்பின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் பினராயி விஜயன் வீட்டில் நடந்த சோதனையைக் கண்டிக்க வேண்டும்.
தேசத்துக்காக போராடும் கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகளை ஆர்எஸ்எஸ்ஸும் பாஜகவும் சேர்ந்து அமலாக்கத் துறை, சிபிஐ, காவல்துறையை வைத்து மோதினால், மார்க்சிஸ்டுகள் நேருக்குநேர் சண்டையிடுவோம்" என்று தெரிவித்தார்.