வருவாய் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியமாக 15,700 ரூபாயை வழங்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் தமிழ்நாடு
கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியமாக 15,700 ரூபாயை வழங்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அலுவலக உதவியாளர்களுக்கு இணையாகக் கிராம உதவியாளர்களுக்கு ரூ. 15,700 கால முறை ஊதியம் வழங்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை கிராம உதவியாளரிடமிருந்து அலுவலக உதவியாளருக்கான பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்ட நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.கா. தங்கராசு தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பி. பார்த்தசாரதி, செயலர் வி.பி. மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.