முகப்பு
தஞ்சாவூர்

"திமுக-அதிமுக அணிகளுக்கு இடையே மட்டுமே போட்டி '

எத்தனை அணிகள் வந்தாலும் ,திமுக - அதிமுக அணிகள் இடையேயான தேர்தலாகத்தான் வருகிற நாடாளுமன்றத்

Updated On : 25 பிப்ரவரி 2019, 9:02 am IST
பகிர்:

எத்தனை அணிகள் வந்தாலும் ,திமுக - அதிமுக அணிகள் இடையேயான தேர்தலாகத்தான் வருகிற நாடாளுமன்றத் தேர்தல் அமையும் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.
தஞ்சாவூரில் திராவிடர் கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
மூன்றாவது அணி உருவானாலும் வலிமை மிக்கதாக இருக்காது. எத்தனை அணிகள் வந்தாலும், இரு துருவ அணிகளாகத்தான் தேர்தலைச் சந்திக்கும் நிலையைப் பெற்றிருக்கிறோம். தற்போதைய நிலையில் திமுக - அதிமுக அணிகளுக்கு இடையேயான தேர்தலாகத்தான் இத்தேர்தலும் அமையும். 
இதில், திமுக தலைமையிலான அணி கொள்கையுடையது. சனாதனத்தை எதிர்க்கும் அணியாக உள்ளது. அதிமுக அணியில் முற்றிலும் முரண்பாடு கொண்ட கட்சிகள் சேர்ந்து தேர்தலைச் சந்திக்க உள்ளனர்.
அக்கூட்டணியில் பாமக சேர்ந்தவுடன் அதன் நன்மதிப்புப் பாதிக்கப்பட்டுவிட்டது. ஏற்கெனவே அந்த அணியில் பாஜக இடம்பெற்றுள்ளதால், மத்திய அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ள சூழலில், அதிமுக அணி மேலும் பலவீனத்தை அடைந்துள்ளது.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை சனாதனத்துக்கு எதிரான யுத்தமாக பார்க்கப்படுகிறது. சனாதன சக்திகள் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால், நாட்டுக்கு மீண்டும் ஆபத்து. மேலும், சிறுபான்மை மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தலாக அமையும். ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பற்றச் சூழல் உருவாகும். 
இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான வகையில் கடந்த 5 ஆண்டுகளாக மோடி தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. வளர்ச்சி, மாற்றம் எனக் கூறிய மோடி, கார்ப்பரேட் வளர்ச்சிக்குத்தான் உதவினார். கார்ப்பரேட்களின் வாழ்க்கை வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், நாடு வளர்ச்சி அடையவில்லை. சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றார் திருமாவளவன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.