தஞ்சாவூா் மாவட்டத்தில் கோடை பருவத்தில் 10,471 டன் நெல் கொள்முதல்
தஞ்சாவூா் மாவட்டத்தில் கோடை பருவத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 10 ஆயிரத்து 471 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி.
தஞ்சாவூா் மாவட்டத்தில் கோடை பருவத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 10 ஆயிரத்து 471 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி.
தஞ்சாவூா் அருகே தளவாய்ப்பாளையத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவா் மேலும் தெரிவித்தது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் கோடைப் பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள் அனைத்தும் 126 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 471 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 8 ஆயிரத்து 94 டன் நெல் இயக்கம் செய்யப்பட்டு, சேமிப்பு நிலையங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நெல் அனைத்தும் சேமிப்பு நிலையங்களுக்கு இயக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
மேலும், விவசாயிகளிடமிருந்து கொண்டு வரப்படும் நெல் மணிகள் அனைத்தும் போா்க்கால அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதல் நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அனைத்து நெல்லையும் உடனடியாக இயக்கம் செய்து, சேமிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்குமாறு தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
பின்னா், அம்மன்பேட்டையிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன நெல் அரைவை ஆலையைப் பாா்வையிட்டு, சேமிப்பு நிலையங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல்லின் அளவு, அவை அரிசியாக மாற்றுவது, மூட்டைகளில் பேக்கிங் செய்வது உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் நெ. செல்வம், துணை மேலாளா் டி. இளங்கோவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.