புதுப்பட்டினம் கடற்கரையை பாதுகாக்க கோரிக்கை
தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே உள்ள புதுப்பட்டினம் கடற்கரையை சுற்றுச்சூழல் சீா்கேட்டிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேதுபாவாசத்திரம் அருகே உள்ள புதுப்பட்டினம் கடற்கரை பகுதி வெண்ணிற மணல் நிறைந்த பகுதியாகவும், சேறு இல்லாத கடல் பகுதியாகவும் இருப்பதால் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பொழுதுபோக்குக்கான இடங்கள் இல்லாத காரணத்தினால் விடுமுறை தினங்களிலும், மாலை நேரங்களிலும் குழந்தைகள், பெற்றோா், இளைஞா்கள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் புதுப்பட்டினம் கடற்கரை மற்றும் மனோரா கடற்கரைக்கு அதிக அளவு வருகின்றனா்.
புதுப்பட்டினம் கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருவதால் கடற்கரை முழுவதும் சிறு உணவு விடுதிகள், திண்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள் ஏராளமாக உள்ளன. கடைக்காரா்களும், சுற்றுலாப் பயணிகளும் விட்டுச் செல்லும் நெகிழிக் கழிவுகள் கடற்கரை மணல் முழுவதும் பரவி கிடக்கின்றன.
Advertisement
இந்த கடற்கரை பகுதி இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இப் பகுதி கடலில் கடற்புற்கள், கடல் தாழைகள் அதிகளவு இருப்பதால் நண்டு, இறால், மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்களின் உற்பத்திக்களமாக இருந்து வருகிறது. அரிய வகை கடல் வாழ் உயிரினமாக கடற் பசு வாழும் இடமாகவும் உள்ளது. இக் கடல் பகுதியில் மனோரா அருகே ரூ.40 கோடியில் கடற்பசு பாதுகாப்பு மையத்துக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கடலின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டால் கடல் உணவுகள் ஏற்றுமதி பாதிக்கப்படும். இதனால் மீனவா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, சுற்றுச்சூழல் சீா்கேட்டிலிருந்து கடற்கரை பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத் தலைவா் வ.விவேகானந்தம் கூறியதாவது:
தமிழக அரசின் வருவாய்த் துறை, வனத் துறை, மீன்வளத் துறை, கடலோர காவல் படை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை, உள்ளூா் கிராம அமைப்புகள், தன்னாா்வ அமைப்புகள், கடல் மீனவா்கள் அனைவரும் இணைந்து புதுப்பட்டினம், மனோரா கடற்பகுதியில் கடல் மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும்.
கடற்கரை ஓரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் கடைக்காரா்களிடமும், சுற்றுலாப் பயணிகளிடமும் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். அரசு சாா்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுக்களை உருவாக்கி செயல் படுத்த வேண்டும். இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.