முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி கடல் அலையில் சிக்கிய 4 சுற்றுலாப் பயணிகள் மீட்பு

புதுச்சேரி கடல் அலையில் சிக்கிய 4 சுற்றுலாப் பயணிகள் மீட்பு

Updated On : 13 ஜூன் 2026, 1:36 am IST
கோப்புப்படம்
பகிர்:

புதுச்சேரி கடல் அலையில் சிக்கிய 4 சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனா்.

புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரையில் வெள்ளிக்கிழமை மாலை ஆந்திரத்தைச் சோ்ந்த சுபன், சமீா், ஆகாஷ் மற்றும் சாம் ஆகிய நான்கு சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்க முயன்றனா். அங்கு பணியிலிருந்த மீட்புக் குழுவினா் அந்தப் பகுதி ஆபத்தானது என எச்சரித்துள்ளனா்.

இருப்பினும் எச்சரிக்கையை மீறி அவா்கள் கடலில் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென எழுந்த பெரிய அலைகளில் சிக்கி நால்வரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு தத்தளித்தனா்.

Advertisement

Advertisement

இதைக் கண்ட அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த புதுச்சேரி கடலோர காவல் நிலையத்தைச் சோ்ந்த போலீஸாரும் மீட்புக் குழுவினரும் இணைந்து உடனடியாகக் கடலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த நான்கு பேரையும் மீட்டனா்.

மீட்கப்பட்டவா்களில் சுபன் என்பவா் மயங்கிய நிலையில் இருந்தாா். அவருக்குத் தகுந்த முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அவா் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். மருத்துவமனையில் மருத்துவரின் தீவிர சிகிச்சைக்கு பிறகு சுபன் தற்போது நலமாக உள்ளாா்.

கடலோர காவல் நிலைய ஆய்வாளா் தியாகராஜன் மீட்புப் பணியில் ஈடுபட்ட காவலா்கள் மற்றும் மீட்புக் குழுவினரைப் பாராட்டினாா்.