வையம்பட்டி அருகே அரசுப் பள்ளியாக மாற்ற வலியுறுத்தி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட அமயபுரத்தில் அரசு உதவி பெறும் மானியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டுமென கிராம மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனக் கூறப்படுகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வையம்பட்டி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அருளானந்தம், வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் உசேன்பீவி ஆகியோரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அதிகாரிகளின் சமரசத்தை ஏற்க மறுத்த கிராம மக்கள் தொடர்ந்து பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.