திருச்சி மண்டலத்தில் 83 மதுக்கடைகள் மூட முடிவு: உடனடியாக 9 கடைகள் மூடப்பட்டன
தமிழக முதல்வா் விஜய் உத்தரவின்படி, திருச்சி மண்டலத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுக்கடைகளில் 83 கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 9 கடைகள் செவ்வாய்க்கிழமையே மூடப்பட்டன.
தமிழக முதல்வா் விஜய் உத்தரவின்படி, திருச்சி மண்டலத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுக்கடைகளில் 83 கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 9 கடைகள் செவ்வாய்க்கிழமையே மூடப்பட்டன.
வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகே 500 மீட்டருக்குள் இயங்கி வரும் மதுக்கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட வேண்டும் என தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கடைகளை கணக்கிட்டு, அவற்றை மூடுவதற்கான நடவடிக்கையில் டாஸ்மாக் அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
திருச்சி மண்டலத்துக்குள்பட்ட திருச்சி, பெரம்பலூா், அரியலூா், கரூா், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திரூவாரூா், தஞ்சாவூா், கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மொத்தம் 83 கடைகள் பட்டியலிடப்பட்டு, அவற்றை மூடுவதற்காக அந்தந்த மாவட்ட ஆட்சியா் உத்தரவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
திருச்சி மாவட்டத்தில் 10201, 10208, 10213, 10234, 10235, 10241, 10263, 10264, 10304, 10327, 10333, 10346, 10347, 10365, 10511, 10210 ஆகிய எண்களை கொண்ட மதுக்கடைகள், பேருந்து நிலையம், கல்வி நிலையம், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட இந்த 16 மதுக்கடைகளில், சத்திரம் பேருந்துநிலையப் பகுதியில் உள்ள 10201 என்ற எண்ணுடைய கடை உடனடியாக செவ்வாய்க்கிழமையே மூடப்பட்டது. இதேபோல், மண்டலத்துக்குள்பட்ட மாவட்டங்களில் விழுப்புரம், கடலூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் தலா 2, பெரம்பலூா், திருவாரூரில் தலா 1 கடை என மண்டலத்தில் 9 கடைகள் உடனடியாக மூடப்பட்டன. மண்டலத்தில் எஞ்சியுள்ள கடைகளையும் விரைந்து மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.