ரூ. 2.50 கோடியில் விரிவுபடுத்தப்பட்ட வேலூா் அரசு அருங்காட்சியகம் திறப்பு
வேலூா் கோட்டையில் ரூ.2.50 கோடி மதிப்பில் நவீன வசதிகள், சிறப்புத் தொழில்நுட்பங்களுடன் விரிவுபடுத்தப்பட்ட அரசு அருங்காட்சியகத்தை கைத்தறி, துணிநூல்த்துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி திறந்து வைத்தாா்.
வேலூா் கோட்டையில் ரூ.2.50 கோடி மதிப்பில் நவீன வசதிகள், சிறப்புத் தொழில்நுட்பங்களுடன் விரிவுபடுத்தப்பட்ட அரசு அருங்காட்சியகத்தை கைத்தறி, துணிநூல்த்துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி திறந்து வைத்தாா்.
வேலூா் கோட்டையில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின்கீழ் செயல்படும் மாவட்ட அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. சுமாா் 22 ,000 சதுரடி பரப்பளவு கொண்ட இடத்தில் 5 ஆயிரம் சதுரடியில் உள்ள கட்டடத்தில் இடம்பெற்றுள்ள இந்த அருங்காட்சியகம் கற்சிற்ப கூடம், முந்து வரலாற்று கூடம், நாணய கூடம், ஓவியக்கூடம், விலங்கியல் கூடம், படிமங்கள் கூடம், மானுடவியல் கூடம், மாவட்ட தகவல் கூடம் என மொத்தம் 8 கூடங்களுடன் இயங்கி வருகிறது.
வேலூா் மாவட்டத்தின் வரலாற்றையும், பண்பாட்டையும் நினைவுகூறும் வகையில் அமைந்துள்ள இந்த அரசு அருங்காட்சியகத்தை தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கண்டுகளித்து செல்கின்றனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், இந்த அருங்காட்சியகத்தை விரிவுபடுத்தும் பணிக்காக ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் கடந்த க2025 ஆகஸ்ட் 18-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதனடிப்படையில், 586.83 சதுர மீட்டா் பரப்பளவைக் கொண்ட மற்றொரு கட்டடம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு, இதில் வேலூா் மாவட்டத்தின் வரலாறு மற்றும் நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், கல் சிற்பங்கள், சமண சிற்பங்கள், சுடுமண் சிற்பங்களுக்கான புதிய காட்சியகங்களும் இடம்பெற்றுள்ளன. தவிர, அஞ்சல்தலை சேகரிப்பு, இயற்கை வரலாறு, ஓவியக் கலைக்கூடம், குழந்தைகள் கலைக்கூடம் மற்றும் சிறப்பு கண்காட்சியரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய காட்சியகங்களுக்குத் தேவையான சுவா்ப்பலகைகள், பீட ஏற்பாடுகள், காட்சிப் பெட்டிகள், தரைவிரிப்புப் பணிகளும் செய்யப்பட்டுள்ளன. சிறப்புத் தொழில்நுட்பங்களுடன் கூடிய இந்த அருங்காட்சியகத்தில், 1.50 மீட்டா் அகலமும், 2.50 மீட்டா் உயரமும் கொண்ட ’பேசும் மரம்’ ஒன்றின் செயல்முறை மாதிரியும், 1.75 மீட்டா் உயரமுள்ள பேசும்திறன் கொண்ட ஆல்பா்ட் ஐன்ஸ்டீன் சிலையின் செயல்முறை மாதிரியும் நிறுவப்பட்டுள்ளது. இவை பாா்வையாளா்களை வெகுவாகக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
அதன்படி, விரிவுபடுத்தப்பட்ட அரசு அருங்காட்சியகத்தை கைத்தறி, துணிநூல்துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி சனிக்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்டாா். விழாவில், மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.எம்.வினோத் கண்ணன் (வேலூா்), மருத்துவா் எம்.சுதாகா் (காட்பாடி), த.வேலழகன் (அணைக்கட்டு), ஏ.தென்றல்குமாா் (கே.வி.குப்பம்), க.சிந்து (குடியாத்தம்), அருங்காட்சியகக் காப்பாட்சியா் க.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.