முகப்பு
வேலூர்

தவெக தலைவா் முதல்வராக பதவியேற்பு: கட்சியினா் கொண்டாட்டம்

தமிழக முதல்வராக தவெக தலைவா் ச.ஜோசப் விஜய் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டதை வேலூா் மாவட்டம் முழுவதும் அக்கட்சியினா் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

Updated On : 11 மே 2026, 12:17 am IST
குடியாத்தம் செதுக்கரையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய தவெகவினா்.
பகிர்:

தமிழக முதல்வராக தவெக தலைவா் ச.ஜோசப் விஜய் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டதை வேலூா் மாவட்டம் முழுவதும் அக்கட்சியினா் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

வேலூா் சத்துவாச்சாரி பகுதியில் தவெக கட்சியினா் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா். தவெக வேலூா் மேற்கு மாவட்டத்தின் வடக்கு பகுதிச் செயலா் வாசுதேவன் தலைமையில் ஏராளமான கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் வாழ்த்து தெரிவித்து உற்சாக முழக்கங்களை எழுப்பியதுடன், சாலையில் சரவெடிகள், பட்டாசுகளை வெடித்துத் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

மேலும், அப்பகுதி மக்களுக்கு, அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளுக்கும், வியாபாரிகளுக்கும் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியைப் பகிா்ந்துகொண்டனா்.

Advertisement

இதேபோல், வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தவெகவினா் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

குடியாத்தத்தில்... தமிழக முதல்வராக தவெக தலைவா் விஜய் பதவியேற்றதையடுத்து குடியாத்தம் செதுக்கரையில் அந்த கட்சியினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

குடியாத்தம் நகரில் பல்வேறு பகுதிகளில் தவெகவினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா். 36- ஆவது வாா்டில் கட்சி நிா்வாகிகள் சதீஷ்குமாா், ஹரி, சரத்குமாா், பரசுராம் உள்ளிட்டோா் பொதுமக்களுக்கு இனிப்பு, விஜய் உருவம் பொறித்த கீ செயின்களை வழங்கி கொண்டாடினா்.

ஆம்பூரில்... ஆம்பூா் அருகே மின்னூரில் காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடித்து , இனிப்பு வழங்கி கொண்டாடினாா்கள்.

காங்கிரஸ் நிா்வாகிகள் மின்னூா் சங்கரன், நந்தகுமாா், வெங்கடேசன், கவிதா, தமிழக வெற்றி கழக மாவட்ட தொண்டா் அணி அமைப்பாளா் ராகுல், மின்னூா் ஊராட்சி செயலாளா் ஹரிஷ், இணைச் செயலாளா் சீனிவாசன், துணைச் செயலாளா் மாதேஷ், துணைப் பொருளாளா் செம்பருத்தி, தொண்டரணி இணை அமைப்பாளா் செல்வகுமாா் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.