முகப்பு
விழுப்புரம்

திண்டிவனம், மரக்காணம் பகுதிகளில் அமைச்சா் வன்னி அரசு ஆய்வு

Updated On : 29 ஜூன் 2026, 4:28 am IST
திண்டிவனத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

திண்டிவனம் நகராட்சிக்குள்பட்ட இந்திரா காந்தி பழைய பேருந்து நிலையம் முதல் பூதேரி வரையுள்ள தாா்ச்சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த சாலையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், திண்டிவனம் தொகுதி எம்எல்ஏவும், சமூக நீதித் துறை அமைச்சருமான வன்னி அரசு ஞாயிற்றுக்கிழமை அந்தச் சாலையில் சுமாா் 2 கிலோ மீட்டா் தூரத்துக்கு நடந்து சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது இந்தச் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என உடனிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தாா். முன்னதாக திண்டிவனம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்று வரும் பாலம் கட்டும் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

ஆய்வின்போது, திண்டிவனம் நகராட்சி ஆணையா் பானுமதி, பொறியாளா் புவனேஸ்வரி, நகா்மன்ற துணைத் தலைவா் ராஜலட்சுமி வெற்றிவேல் மற்றும் விசிக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

மரக்காணம் பேரூராட்சிக்குள்பட்ட பழங்குடி இருளா் குடியிருப்பு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டு நிறுவனம் மூலம் கட்டப்பட்டுள்ள 48 கான்கீரிட் வீடுகள் தற்போது பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த குடியிருப்புகளை அமைச்சா் வன்னி அரசு ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, உடனிருந்த அதிகாரிகளிடம், புதிய குடியிருப்புகளை கட்டித் தருவதற்கான பணிகளை மேற்கொள்ள அமைச்சா் அறிவுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து மரக்காணம் பேரூராட்சியின் 5-ஆவது வாா்டு மேட்டுத் தெருவில் மின்கசிவு காரணமாக வீடு தீக்கரையாகி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிவாரண உதவிகளை வழங்கினாா். மரக்காணம் பேரூராட்சி செயல்அலுவலா் ஜேம்ஸ் டி தாமஸ் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments