கரும்பு வயல்களில் நிலப் போர்வை அமைக்கலாம்: வேளாண்மைத் துறை அறிவுறுத்தல்
விவசாயிகள் தங்களது கரும்பு வயல்களில் நிலப் போர்வை அமைக்கலாம் என வேளாண்மைத் துறை அறிவுறுத்தியது.
விவசாயிகள் தங்களது கரும்பு வயல்களில் நிலப் போர்வை அமைக்கலாம் என வேளாண்மைத் துறை அறிவுறுத்தியது.
கடலூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. கரும்பு பயிரில் ஒரு பருவத்தில் ஒரு ஹெக்டேருக்கு 10 முதல் 12 மெட்ரிக் டன்கள் வரை உலர்ந்த இலைகள் உற்பத்தியாகிறது. கரும்பு நடவு செய்த 5-ஆவது மாதம் முதல் 7-ஆவது மாதம் வரை உலர்ந்த இலைகள் நீக்கப்படுகிறது. இந்த உலர்ந்த சோகைகளை கையாள்வது கடினமாக இருப்பதால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களிலேயே அவைகளை தீயிட்டு எரித்து விடுகின்றனர்.
இதுபோன்ற செயல்களில் விவசாயிகள் ஈடுபடக் கூடாதென கடலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சு.பூவராகன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கரும்பு சோகைகளை தீயிட்டுக் கொளுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதுடன் மண்ணின் வெப்ப நிலை அதிகரித்து நுண்ணுயிர்கள், புழுக்கள் போன்றவை அழிக்கப்படுகின்றன. மேலும், விலைமதிக்க முடியாத அங்ககச் சத்தும் வீணாகிறது. இந்த கரும்பு சோலைகளில் கரிச்சத்து 28 சதவீதமும், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியன குறிப்பிட்ட அளவிலும் உள்ளன.
எனவே, உலர்ந்த கரும்பு சோகைகளை மண்ணோடு கலப்பதால் மண் வளம் மேம்பட்டு, நீர்ப் பிடிப்புத் திறனும் அதிகரிக்கிறது. சோகைகளை எளிதில் மக்க வைத்து உரமாக்க நுண்ணுயிர்கள் பயன்படுகின்றன.
மேலும், இதனுடன் பாறைபாஸ்பேட், ஜிப்சம் கலப்பதால் மக்கும் திறன் அதிகரிக்கிறது.
இயற்கை உரத்துக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில், கரும்பு சோகைகளை சிறு துண்டுகளாக்கி நிலப் போர்வையாக அமைப்பதன் மூலம் மண்ணில் ஈரம் பாதுகாக்கப்படுவதுடன், களைகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும், இவற்றை மக்கச் செய்து கம்போஸ்ட் உரமாகவும் பயன்படுத்தலாம். தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் நீடித்த, நிலையான கரும்பு சாகுபடி இனத்தில் மண்வளம் செறிவூட்டுதலின்கீழ் கரும்பு விவசாயிகள் தங்களது வயலில் கிடைக்கும் கரும்பு சோகைகளை பொடியாக்கி, நிலப் போர்வை அமைக்க ஹெக்டேருக்கு ரூ.1,500 வீதம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது என்றார் அவர்.
மேலும், கரும்பு சோகைகளை பொடியாக்கிட இயந்திரம் உள்ளது. அதை விவசாயிகள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.