முகப்பு
கடலூர்

குடும்பத் தகராறில் விபரீதம்: தம்பதி தீயில் கருகிச் சாவு

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே குடும்பத் தகராறின்போது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த பெண் தீயில் கருகி உயிரிழந்தார்.

Updated On : 8 அக்டோபர் 2018, 9:30 am IST
பகிர்:

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே குடும்பத் தகராறின்போது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த பெண் தீயில் கருகி உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற கணவரும் தீக்காயமடைந்து உயிரிழந்தார்.
 காட்டுமன்னார்கோவில் அருகே மேலகஞ்சங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் சுரேஷ் (33), பெயின்டர். இவரது மனைவி நளினி (30). இவர்களுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நிஷா (10), நிதர்ஷனா (7), சபரீசன் (2) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். சுரேஷ் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவி நளினியிடம் தகராறு செய்து வந்தாராம்.
 சனிக்கிழமை (அக்.6) மதியம் தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, நளினி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குச்சியை பற்ற வைத்துக்கொண்டு, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியபடி வாக்குவாதம் செய்ததாகத் தெரிகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது உடலில் தீ பரவியது.
 இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுரேஷ், தீயை அணைத்து மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில், அவர் மீதும் தீ பரவியது. இதையடுத்து தம்பதியர் இருவரும் தீயின் வெப்பம் தாளாமல் வீட்டிலிருந்து வெளியே வந்து கூச்சலிட்டனர். அந்தப் பகுதி மக்கள் ஓடி வந்து தம்பதியர் மீது பற்றியெரிந்த தீயை அணைத்தனர்.
 எனினும், பலத்த காயமடைந்த அவர்கள் இருவரும் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, நளினி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணியளவிலும், சுரேஷ் காலை 7.10 மணியளவிலும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
 இதுகுறித்து நளினியின் தாயார் தமிழரசி அளித்த புகாரின்பேரில், காட்டுமன்னார்கோவில் காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் சிவராமன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.