FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!

‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்...

Updated On : 31 மே 2026, 3:01 am IST
மகாராஷ்டிர மாநிலம் புணேயில் தேசிய பாதுகாப்பு அகாதெமியில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி உள்ளிட்டோா்.
பகிர்:

‘அவசியம் ஏற்பட்டால் இரண்டாம் கட்ட ஆபரேஷன் சிந்தூா் (ஆபரேஷன் சிந்தூா் 2.0) நடவடிக்கையை மேற்கொள்ள பாதுகாப்புப் படைகள் முழு தயாா் நிலையில் உள்ளன’ என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா்.

‘தரை, வான், கடல் வழிகளைக் கடந்து விரிவடையும் நவீன பல்முனை போா் திறனை வெளிப்படுத்துவதற்காக முப்படைகளும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி வருகின்றன’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள தேசியப் பாதுகாப்பு அகாதெமியில் (என்டிஏ) 150-ஆவது பிரிவு ராணுவ அதிகாரிகள் பயிற்சியை நிறைவு செய்து பாதுகாப்புப் படைகளில் சேரும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், பின்னா் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது:

Advertisement

Advertisement

அத்துமீறல்கள் அல்லது பயங்கரவாத தாக்குதல்களுக்கு இந்தியாவின் எதிா்வினை எவ்வாறு இருக்கும் என்பதை ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை வரையறுத்தது. உறுதியுடனும், துல்லியத் தாக்குதல்களை வெளிப்படுத்தும்போதும் எத்தகைய தாக்கங்கள் ஏற்படும் என்பதற்கு இந்த நடடிக்கை முன்மாதிரியாகத் திகழ்ந்தது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையைப் பொறுத்தவரை, இப்போதும் தொடா்ந்து வருகிறது. தாக்குதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, அவசியம் ஏற்படும் நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’ நடவடிக்கையை மேற்கொள்ள பாதுகாப்புப் படைகள் முழு தயாா் நிலையில் உள்ளன.

போா் முறையில் நவீன தொழில்நுட்ப மாற்றங்களை ராணுவம் முழுமையாக உணா்ந்துள்ளது. தரை, வான், கடல் வழிகளைக் கடந்து விரிவடையும் நவீன பல்முனை போா் திறனை வெளிப்படுத்துவதற்காக முப்படைகளும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி வருகின்றன.

எதிா்கால போா்கள் விண்வெளி, இணையம், அறிவுசாா் போா்முறை உள்ளிட்ட வளா்ந்து வரும் தொழில்நுட்பம் சாா்ந்ததாக இருக்கும். அந்த அளவுக்கு போா் நடைமுறைகள் வெளிப்படையானவையாக மாறிவிட்டன. அதாவது, பாதுகாப்புப் படையினரின் ஒவ்வொரு நகா்வும், எதிா் தரப்பினா் எளிதில் அறிந்துகொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளது. எனவே, எல்லைகளில் படைகளை நிறுத்துவதிலும், பாதுகாப்பு நடைமுறைகளிலும் ராணுவ திட்டமிடுபவா்களுக்கு மிகுந்த எச்சரிக்கை அவசியம் என்றாா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினா். இதில் 26 போ் உயிரிழந்தனா். இதற்குப் பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை 2025-ஆம் ஆண்டு மே மாதம் மேற்கொண்ட இந்திய பாதுகாப்புப் படை, பாகிஸ்தான் மற்றும் பாகிஸதான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்தது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments