எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!
எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா - சீன அதிகாரிகள் இடையே 1100 முறைக்கும் மேலே பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக உபேந்திர திவேதி தெரிவித்துள்ளது குறித்து...
எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா - சீன அதிகாரிகள் இடையே 1100 முறைக்கும் மேலே பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக ஓய்வு பெறவுள்ள ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர திவேதி இன்று (ஜூன் 29) தெரிவித்தார்.
சீன எல்லைப் பகுதிகளில் பதற்றம் தொடர்ந்தாலும், நிலைமை சீராகவுள்ளதாகவும், தொடர் கண்காணிப்பு மட்டுமே தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
தில்லியில் ஆங்கில ஊடகத்துடனான உரையாடலில் பேசிய உபேந்திர திவேதி,
Advertisement
Advertisement
''எல்லை விவகாரத்தில் 2024 - 25 காலகட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பு உறவில் சற்று முன்னேற்றம் இருந்தது.
ராணுவ அளவிலான நீடித்த ஈடுபாடு அமைதியை நீடிக்கச் செய்ததில் முக்கியப் பங்கு வகித்தது. வழக்கமான எல்லைப் பிரச்னைகளுக்காக ஆண்டுக்கு 1100 முறைக்கும் மேலே இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இரு தரப்பில் தவறான புரிதல்களை தடுக்க அது உதவியது.
ஒட்டுமொத்தச் சூழலும் நன்கு நிறுவப்பட்ட வழிமுறைகள் மூலம் கையாளப்பட்டு வருகிறது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு குறித்த மாறுபட்ட கண்ணோட்டங்களால் உள்ளூர் அளவில் ஏதேனும் சிக்கல்கள் எழும்போதெல்லாம், அவை ராணுவங்களுக்கு இடையிலான தொடர்புகள், நேரடித் தொடர்பு வழிமுறைகள், கொடி கூட்டங்கள் மற்றும் தளபதி நிலையிலான பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றின் மூலம் தீர்க்கப்படுகின்றன.
எல்லைப் பகுதிகளில் ரோந்துப் பணிகள் மற்றும் பிற உள்ளூர் நடவடிக்கைகள் உள்ளிட்ட வழக்கமான செயல்பாடுகளை மேற்கொள்ளவும், நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இந்த வழிமுறைகள் உதவியுள்ளன எனக் குறிப்பிட்டார்.
முதலாவதாக, உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் அமைதியையும் நிலைத்தன்மையையும் நாம் பேணிக்காக்க வேண்டும். இரண்டாவதாக, உள்ளூர் பிரச்னைகளை பேச்சுவார்த்தை மற்றும் நிறுவப்பட்ட வழிமுறைகள் மூலம் தீர்க்க நாங்கள் விரும்புகிறோம்'' எனக் குறிப்பிட்டார்.
Over 1100 interactions happen between Indian, Chinese militaries annually to prevent misunderstandings, address border issues: Army Chief Gen Dwivedi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.