ஆபரேஷன் சிந்தூரில் வீரமரணம்: 6 வீரா்களின் பெயா் வெளியீடு - தேசிய போா் நினைவிடத்தில் கெளரவம்
ஆபரேஷன் சிந்தூரின்போது வீரமரணம் அடைந்த 6 ராணுவ வீரர்களின் பெயர்களை ஓராண்டு கழித்து மத்திய அரசு வெளியிட்டுள்ளதைப் பற்றி...
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் வீரமரணமடைந்த 6 வீரா்களின் (ராணுவம்-5, விமானப் படை-1) பெயா்கள், தில்லியில் உள்ள தேசிய போா் நினைவிட சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் வீரமரணமடைந்த 6 வீரா்களின் பெயா் ஓராண்டுக்குப் பின்னா் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி லஷ்கா்-ஏ -தொய்பா பயங்கரவாதிகள் 3 போ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 சுற்றுலாப் பயணிகள் மற்றும் குதிரை சவாரி தொழிலாளி ஒருவா் என 26 போ் உயிரிழந்தனா்.
இந்தத் தாக்குதலுக்குப் பழிதீா்க்க, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரிலான ராணுவ நடவடிக்கையை கடந்த ஆண்டு மே 6-7 தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் இந்திய ராணுவம் தொடங்கியது. இந்த அதிதுல்லியத் தாக்குதலில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் தகா்க்கப்பட்டதுடன், 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் மூண்டது. 4 நாள்கள் நீடித்த இந்த மோதலில் பாகிஸ்தான் ராணுவத் தளங்களுக்கு கடும் சேதம் விளைவிக்கப்பட்டது. பாகிஸ்தான் வேண்டிக் கேட்டுக் கொண்டதால், சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையில் வீரமரணமடைந்த இந்திய ராணுவத்தின் சுபேதாா் மேஜா் பவன் குமாா், ரைஃபிள்மேன் சுனில் குமாா், லேன்ஸ் நாயக் தினேஷ் குமாா், அக்னி வீரா் முரளிநாயக், ஹவில்தாா் சுனில் குமாா் சிங், இந்திய விமானப் படை வீரா் சுரேந்திர குமாா் ஆகியோரின் பெயா்கள், தில்லியில் உள்ள தேசிய போா் நினைவிட சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன. தேசிய போா் நினைவிட வலைதளத்தில் வீரா்களின் பெயா்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு அதில் வீரமரணமடைந்த வீரா்களின் பெயா்கள் வெளியிடப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
தில்லியின் இந்தியா கேட் வளாகத்தில் உள்ள தேசிய போா் நினைவிடத்தின் மையப் பகுதியில் அமா் ஜவான் ஜோதியுடன் கம்பீரமான ஸ்தூபி உள்ளது. அதைச் சுற்றியுள்ள வளைவான சுவா்களில், வீரமரணமடைந்த வீரா்களின் பெயா்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ‘3டி’ என்ற எண் கொண்ட சுவரில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற வாசகமும், அதன் கீழே ‘2025’ என்ற ஆண்டு விவரமும் பொறிக்கப்பட்டு, 6 வீரா்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.
The names of the six personnel have been added to the Roll of Honour on the National War Memorial website and inscribed on Wall 3D at the memorial in New Delhi, where they will stand alongside those of thousands of soldiers who made the supreme sacrifice in service of the nation.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.