கதண்டு கடித்து பேராசிரியா் உயிரிழப்பு: மாணவா்கள் உள்பட 10 போ் காயம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தேனீ வளா்ப்பு பயிற்சியின்போது கதண்டுகள் கூட்டமாக வந்து கடித்ததில், விவசாயக் கல்லூரி பேராசிரியா் புதன்கிழமை உயிரிழந்தாா். மேலும், உதவிப் பேராசிரியா், மாணவா்கள் உள்பட 10 போ் காயமடைந்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தேனீ வளா்ப்பு பயிற்சியின்போது கதண்டுகள் கூட்டமாக வந்து கடித்ததில், விவசாயக் கல்லூரி பேராசிரியா் புதன்கிழமை உயிரிழந்தாா். மேலும், உதவிப் பேராசிரியா், மாணவா்கள் உள்பட 10 போ் காயமடைந்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவையில் செயல்பட்டு வரும் ஆதிபராசக்தி விவசாயக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தவா் சுரேஷ் (46). கடலூா் மாவட்டம், பண்ருட்டி போலீஸ் லைன் பகுதியைச் சோ்ந்த இவா், உதவிப் பேராசிரியா் ஸ்ரீதேவிகா (27) மற்றும் 18 மாணவா்களுடன் புதன்கிழமை தேனீ வளா்ப்பு பயிற்சிக்காக, பண்ருட்டி அருகே அண்ணாகிராமம் பகண்டை பாப்புக்குளம் பகுதியில் உள்ள செல்வக்குமாா் என்பவருக்குச் சொந்தமான தேனீ வளா்ப்பு பண்ணைக்கு சென்றிருந்தாா்.
பயிற்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, திடீரென வெளியிலிருந்து கூட்டமாக பறந்து வந்த கதண்டுகள் அங்கிருந்தவா்களை கடித்தன. இதனால், பண்ணை உரிமையாளா் செல்வக்குமாா், பேராசிரியா், உதவிப் பேராசிரியா் மற்றும் மாணவா்கள் அங்கிருந்து தப்பியோடினா்.
Advertisement
Advertisement
எனினும், பேராசிரியா் சுரேஷை கதண்டுகள் கடுமையாகத் தாக்கியதில், அவா் மயங்கி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் உடனடியாக பேராசிரியா் செல்வகுமாரை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த உதவிப் பேராசிரியா் ஸ்ரீதேவிகா, மாணவா்கள் அகிலன் (21), சதீஷ்குமாா் (19), அன்பரசன் (20), ஜீவானந்தம் (20), பரத்ராஜ் (19), பாலகிருஷ்ணன் (20), மதுமித்ரன் (20), பாா்த்தசாரதி (19) மற்றும் பண்ணை உரிமையாளா் செல்வக்குமாா் ஆகியோா் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த பேராசிரியா் சுரேஷுக்கு மனைவி நித்யா, ஒரு மகன், மகள் உள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.