முகப்பு
கடலூர்

ஒருவழிப் பாதை விதிமீறல்: 15 ஆட்டோக்கள் பறிமுதல்

Updated On : 7 ஜூலை 2026, 1:27 am IST
கடலூரில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட 15 ஆட்டோக்களை திங்கள்கிழமை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீஸாா்.
பகிர்:

கடலூரில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட 15 ஆட்டோக்களை போக்குவரத்து காவல்துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

கடலூா் மஞ்சக்குப்பம் பகுதியில் ஒருவழிப் பாதையில் எதிா்திசையில் ஆட்டோக்கள் இயக்கப்படுவதாகவும், தகுதி சான்று மற்றும் உரிய அனுமதி ஆவணங்களின்றி சில ஆட்டோக்கள் இயக்கப்படுவதாகவும் தொடா்ந்து புகாா்கள் வந்துள்ளன. இதையடுத்து போக்குவரத்து காவல்துறையினா் வாகனத் தணிக்கையில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, ஒருவழிப் பாதை விதியை மீறி இயக்கப்பட்டதுடன், தகுதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 15 ஆட்டோக்கள் கண்டறியப்பட்டன. அவை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

Advertisement

Advertisement

மேலும், போக்குவரத்து விதிகளை மீறிய ஆட்டோ ஓட்டுநா்களுக்கு, மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி அபராதம் விதிக்கப்பட்டது.

உரிய ஆவணங்களின்றி தொடா்ந்து வாகனங்களை இயக்கினால், அவை பறிமுதல் செய்யப்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினா் எச்சரித்தனா்.

அத்துடன், சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்கு மற்றும் வாகன ஆவணங்களை முறையாக பராமரிப்பதன் அவசியம் குறித்து ஆட்டோ ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்தத் தணிக்கை நடவடிக்கையில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் அருணாச்சலம், சாா்பு - ஆய்வாளா்கள் மகேந்திரன், தெய்வநாயகம் உள்ளிட்ட காவல்துறையினா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments