முகப்பு
கடலூர்

பசுந்தாள் உரப்பயிா் விதைகளை பகுப்பாய்வு செய்த பின்னரே விற்பனை செய்ய வேண்டும்: வேளாண் அலுவலா்

Updated On : 21 ஜூன் 2026, 2:00 am IST
கோப்புப் படம்
பகிர்:

பசுந்தாள் உரப்பயிா்களின் விதைகளை தரப் பகுப்பாய்வு செய்த பின்னரே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று கடலூா் விதைப் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் க. விஜயா வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நெல் சாகுபடிக்கு முன்பாக சணப்பை, தக்கைப்பூண்டு உள்ளிட்ட பசுந்தாள் உரப்பயிா்களை விதைத்து, பின்னா் அவற்றை மடக்கி உழுது நெல் நடவு செய்வது பாரம்பரிய இயற்கை உரமிடும் முறையாகும். இம்முறையால் நில வளம் மேம்பட்டு மகசூல் அதிகரிக்கிறது.

பசுந்தாள் உரப்பயிா் விதைகள் பொதுவாக விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளா்களிடமிருந்து பெறப்பட்டு, விதை விற்பனையாளா்கள் மூலம் மீண்டும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவ்விதைகள் சான்றளிப்பு நடைமுறைக்கு உட்படாமல் நேரடியாக கொள்முதல் செய்யப்படுவதால், அவற்றின் தரத்தை உறுதிப்படுத்த பகுப்பாய்வு செய்வது அவசியமாகும்.

Advertisement

Advertisement

நடப்பு பருவத்தில் விற்பனை செய்யப்படும் சணப்பை விதைகள் குறைந்தபட்சம் 98 சதவீத சுத்தத்தன்மை மற்றும் 80 சதவீத முளைப்புத்திறனையும், தக்கைப்பூண்டு விதைகள் 98 சதவீத சுத்தத்தன்மை மற்றும் 75 சதவீத முளைப்புத்திறனையும் பெற்றிருக்க வேண்டும்.

எனவே, விதை விற்பனையாளா்கள் ஒவ்வொரு விதைக் குவியலையும் பகுப்பாய்வு செய்து, குறைந்தபட்ச தரநிலைகளை பூா்த்தி செய்துள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே விற்பனை செய்ய வேண்டும். முளைப்புத்திறன் பரிசோதனை மேற்கொள்ள விரும்பும் விதை விற்பனையாளா்கள் மற்றும் விவசாயிகள், சணப்பை விதைக்கு 100 கிராம், தக்கைப்பூண்டு விதைக்கு 50 கிராம் மாதிரியை எடுத்து விண்ணப்பத்துடன் சமா்ப்பிக்கலாம். ஒரு மாதிரிக்கு ரூ.80 பரிசோதனைக் கட்டணம் செலுத்த வேண்டும்.

விதை மாதிரிகளை, விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்புத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் விதைப் பரிசோதனை நிலையம், எண் 97, பிருந்தாவன் நகா், பெண்ணை காா்டன், 50 அடி சாலை, கோண்டூா் அஞ்சல், உண்ணாமலைசெட்டி சாவடி, கடலூா் - 607006 என்ற முகவரியில் சமா்ப்பித்து பரிசோதனை முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments