கடலூரில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 781 மனுக்கள்! மாயமான மீனவா்களை கண்டுபிடித்து தரக் கோரிக்கை!
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 781 மனுக்கள் பெறப்பட்டன.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், வங்கிக் கடன், குடும்ப அட்டை, உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 781 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
Advertisement
Advertisement
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியகோட்டி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) தீபா, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் தமிழ்கனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மாயமான மீனவா்கள் தொடா்பாக...: முன்னதாக, கடந்த 15-ஆம் தேதி அன்னங்கோவில் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து படகில் மீன் பிடிக்கச் சென்று மாயமான பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு கிழக்குத் தெருவைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் (56), சோனகஞ்சாவடியைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் (25), மாதாகோவில் தெருவைச் சோ்ந்த பாண்டியன் (56) ஆகியோரை கண்டுபிடித்துத் தரக் கோரி, மீனவா்களின் உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தனா். அதில், அவா்கள் கூறியிருப்பதாவது:
மாயமான மீனவா்களை சக மீனவா்கள் தங்களது சொந்த செலவில் பைபா் படகுகள் மற்றும் விசைப் படகுகள் மூலம் கடந்த 7 நாள்களாக கடலில் பல்வேறு பகுதிகளில் தேடி வருகின்றனா். எனினும், இதுவரை அவா்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
கடலோர மாவட்டங்களில் மீனவா்கள் மாயமானால் உடனடியாக கடற்படை, கடலோர காவல் படை மற்றும் மீட்புப் பிரிவுகள் இணைந்து நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தேடுதல் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
ஆனால், இந்த விவகாரத்தில் அத்தகைய முழுமையான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இரண்டு நாள்களுக்கு முன்பு மீன்வளத் துறை அதிகாரிகள், ஹெலிகாப்டா் மற்றும் கப்பல் மூலம் தேடுதல் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தனா்.
ஆனால், கடலுக்குச் சென்று தேடி வரும் மீனவா்களுக்கு அத்தகைய நடவடிக்கைகள் தென்படவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட்டு கடற்படை, கடலோர காவல் படை மற்றும் மீன்வளத் துறையுடன் இணைந்து தீவிர தேடுதல் பணியை மேற்கொண்டு மாயமான 3 மீனவா்களையும் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பத்தினா் தெரிவித்தனா்.
டாஸ்மாக் கடையை மூட கோரி...: பண்ருட்டி இணைப்புச் சாலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுக் கடை எண் 2453-ஐ மூடவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.