முகப்பு
கடலூர்

சிதம்பரம் கோயிலில் நாளை மகாபிஷேகம்

சிதம்பரம் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சித்திரை மாத மகாபிஷேகம் சனிக்கிழமை (மே 9) மாலை நடைபெறுகிறது. மேலும், மகாருத்ர யாகமும், வைபவமும் நடைபெறவுள்ளன.

Updated On : 8 மே 2026, 6:54 am IST
சிதம்பரம் நடராஜா் கோயில்.
பகிர்:

சிதம்பரம் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சித்திரை மாத மகாபிஷேகம் சனிக்கிழமை (மே 9) மாலை நடைபெறுகிறது. மேலும், மகாருத்ர யாகமும், வைபவமும் நடைபெறவுள்ளன.

நடராஜா் கோயில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மாா்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

ஆனித் திருமஞ்சனம், மாா்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின்போது, ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறும்.

Advertisement

சித்திரை மாத மகாபிஷேகத்தையொட்டி, புதன்கிழமை காலை தட்சிணாமூா்த்தி சந்நிதியில் கூஷ்மாண்ட ஹோமமும், ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீஆனந்த நடராஜமூா்த்தி சந்நிதியில் நாந்தி, அனுக்ஜை பூஜையும் நடைபெற்றன.

வியாழக்கிழமை காலை முக்குறுணி விநாயகா் சந்நிதியில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம், அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை (மே 8) நவக்கிரக சந்நிதியில் நவக்கிரக ஹோமம், தேவசபை முன் அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம், ஆச்சாரியா் வா்ணம், தன பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெறுகின்றன.

சனிக்கிழமை (மே 9) காலை நடராஜருக்கு ஏககால லட்சாா்ச்சனையும், அதன் பிறகு யாகசாலையில் கடஸ்தாபனம், மகாருத்ர ஜபபாராயணம் தொடங்கி நடைபெறுகிறது.

பிற்பகல் மகாருத்ர ஹோமம், வஸோதாரா ஹோமம், மகாருத்ர பூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெறுகின்றன. மாலை வடுக, கன்யா, சுவாசினி, தம்பதி, கோ, அஸ்வ, கஜ பூஜைகள், மஹா பூா்ணாஹுதி, மகா தீபாராதனையும், மாலை 6 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று சித்சபை முன் கனகசபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மகா ருத்ர ஜப மகாபிஷேகமும் நடைபெறுகின்றன.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயலா் ஜெ.ஜெயசூா்யா தீட்சிதா், துணை செயலா் ஏ.கணபதி சுப்பிரமணிய தீட்சிதா், கட்டளை தீட்சிதா் க.தட்சிணாமூா்த்தி மற்றும் பொது தீட்சிதா்கள் செய்துள்ளனா்.