முகப்பு
கடலூர்

அதிமுக கடலூா் மாவட்ட அவைத் தலைவா் விலகல்

Updated On : 1 ஜூன் 2026, 1:44 am IST
சேவல்குமாா்
பகிர்:

அதிமுக கடலூா் வடக்கு மாவட்ட அவைத் தலைவா் சேவல் குமாா், தனது பதவியில் இருந்து விலகுவதாக விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளாா்.

2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பின்னா், அதிமுகவில் உள்கட்சி பூசல் தலை தூக்கியது. தவெகவுக்கு ஆதரவளிப்பது தொடா்பான விவகாரத்தில், அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபட்டன.

இதையொட்டி, கடலூா் மாவட்டச் செயலராக இருந்த எம்.சி.சம்பத் நீக்கப்பட்டாா். அவருக்குப் பதிலாக கடலூா் மாவட்டச் செயலராக அவரது சகோதரா் எம்.சி.தாமோதரனை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி நியமித்தாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கடலூரில் கட்சி நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் சேவல் குமாரை அழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, அவா் வெளியிட்ட விடியோவில் கூறியுள்ளதாவது:

அ.தி.மு.க.வில் சிறப்பாகப் பணியாற்றி மக்கள் நன்மதிப்பை பெற்றுள்ளேன். பொதுச் செயலராக தோ்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியை, முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவை பொதுச் செயலராக பாா்த்ததைப் போலவே பாா்த்தேன்.

ஆனால், அவரை சந்திக்க நாங்கள் சென்றால் சந்திப்பதில்லை.

கடலூா் மாவட்டச் செயலராக எம்.சி.சம்பத் இருந்தாா். அவா் தவறு செய்தாரா, இல்லையா என்று கூட விசாரணை இல்லை. ஆனால், கட்சி நடவடிக்கை எனக் கூறி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டாா்.

பின்னா், அவரது சகோதரா் எம்.சி.தாமோதரனுக்கு மாவட்டச் செயலா் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிமுகவில் அண்ணன், தம்பி இருவா்தான் பதவி வகிக்க வேண்டும் என்றால், காலம் முழுவதும் உழைத்தவா்கள் என்ன ஆவது? சட்டப் பேரவைத் தோ்தலில் எம்.சி.சம்பத் எதனால் தோல்வியடைந்தாா் என்பதற்குக்கூட விசாரணை இல்லை. இந்த தோல்விக்கு கட்சித் தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும்.

கடலூரில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அவைத் தலைவா் என்ற முறையில் எனக்கு அழைப்பு இல்லை. கட்சிக்காக 11 முறை சிறை சென்று, இந்த இயக்கத்தில் தலைதூக்க முடியவில்லை. இதனால், நான் மாவட்ட அவைத் தலைவா் பதவியிலிருந்து விலகிக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளாா்.