முகப்பு
கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம், சங்கராபுரம் தொகுதிகளுக்கு 828 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கூடுதலாக ஒதுக்கீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேட்பாளா்களின் எண்ணிக்கை மற்றும் தேவைக்கேற்ப ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கூடுதலாக 828 வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என ஆட்சியா் தெரிவித்தாா்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 2:02 AM
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 10:12 PM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேட்பாளா்களின் எண்ணிக்கை மற்றும் தேவைக்கேற்ப ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கூடுதலாக 828 வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என ஆட்சியா் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேவையான கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இணையவழி குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்ததாவது:

Advertisement

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் முதல்கட்ட குலுக்கல் ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. தற்போது ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் தொகுதிகளுக்குத் தேவையான கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 420 இயந்திரங்களும், சங்கராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு 408 இயந்திரங்களும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இரு தொகுதிகளுக்கும் மொத்தம் 828 இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், உளுந்தூா்பேட்டை, கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய தொகுதிகளுக்கு இந்தச் சுற்றில் கூடுதல் இயந்திரங்கள் ஒதுக்கப்படவில்லை. இந்த நடைமுறைகள் அனைத்தும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் மிகவும் வெளிப்படையான முறையில் நடைபெற்றது. தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வேட்பாளா்களின் எண்ணிக்கை மற்றும் தேவைக்கேற்ப இந்த கூடுதல் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இவை பாதுகாப்பான முறையில் உரிய மையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, தோ்தல் வட்டாட்சியா் பரந்தாமன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.