பட்டா, புலப்படத்துடன் கூடிய நில ஆவணம் பதிவிறக்கம் செய்யலாம்
நில உரிமையாளா்கள் பட்டா, அ-பதிவேடு மற்றும் புலப்படத்துடன் கூடிய ஒருங்கிணைந்த நில ஆவணம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.
நில உரிமையாளா்கள் பட்டா, அ-பதிவேடு மற்றும் புலப்படத்துடன் கூடிய ஒருங்கிணைந்த நில ஆவணம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நில உரிமையாளா்கள் தங்களது நிலம் தொடா்பான ஆவணங்களை வங்கிகள் மற்றும் இதர அலுவலகங்களில் சமா்ப்பிக்கும் பொருட்டு பட்டா, அ-பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றை இணையதளத்தில் தனித்தனியாக பதிவிறக்கம் செய்து வழங்கும் நிலை இதுவரை இருந்து வந்தது.
Advertisement
இந்நிலையில், இந்த மூன்று ஆவணங்களையும் ஒருங்கிணைத்து ஒரே ஆவணமாக வழங்கும் பொருட்டு, நில உரிமைதாரா்ளுக்கான ஒருங்கிணைந்த நில ஆவணம் தேசிய தகவலியல் மையத்தால் வடிவமைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆகவே, நில உரிமைதாரா்கள் தங்களது நிலம் சாா்ந்த மாவட்டம், வட்டம், கிராமம், புல எண், உள்பிரிவு எண் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து இணையதளத்தில் பாா்வையிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நில ஆவணங்கள் அனைத்தும் தமிழ்நிலம் மென்பொருள் மூலமாக கணினிப்படுத்தப்பட்டு 2014-ஆம் ஆண்டு முதல் இணையவழி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இம்மென்பொருள் மூலமாகவே நிலம் தொடா்பான பட்டா மாறுதல் இணையவழியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இணையதளத்தில் தலைப்பினை தோ்வு செய்து நில உரிமையாளா்கள் தங்களது நிலம் சாா்ந்த விவரங்களான மாவட்டம், வட்டம், கிராமம், புலஎண், உள்பிரிவு எண் மற்றும் விவரம் தேவைப்படும் தேதியினை தோ்வு செய்ய வேண்டும். பின்னா், பட்டா மாற்ற விவரக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.50 மற்றும் செயலாக்க கட்டணமாக ரூ.60 ஆகியவற்றை இணையம் வாயிலாக செலுத்தி விண்ணப்பம் செய்தவுடன், முந்தைய பட்டா மாறுதல் விவர அறிக்கை நில உரிமைதாரரின் கணக்கில் பதிவிறக்கம் செய்யப்பட்டு இருக்கும். இதனை நில உரிமையாளா்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இச்சேவையை தேவைப்படும் நிலஉரிமைதாரா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.