சரவெடிகள் வெடிக்க தீயணைப்புத் துறை தடை
புதுவையில் சரவெடிகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக புதுவை கோட்டத் தீயணைப்புத் துறை அதிகாரி இளங்கோ தெரிவித்தார்.
புதுவையில் சரவெடிகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக புதுவை கோட்டத் தீயணைப்புத் துறை அதிகாரி இளங்கோ தெரிவித்தார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உயரே சென்று வெடிக்கும் ராக்கெட், அவுட் போன்ற பட்டாசுகள், சீனப் பட்டாசுகள் விற்கத் தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசுகளை நடு வீதியில் வைத்து வெடிக்கக் கூடாது. சிறுவர்கள் பட்டாசுகளை வெடிக்கும் போது பெரியவர்களும் உடனிருப்பது பாதுகாப்பானது. பட்டாசு அருகே புகைப்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
வெடிக்காத, புகைந்து போன பட்டாசுகளை நீண்ட குச்சிகளைக் கொண்டு அப்புறத்தப்படுத்த வேண்டும்.
குழந்தைகள் பருத்தி ஆடைகள், காலணிகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும். குடிசைப் பகுதிகளில் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, சரவெடிகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வியாபாரிகளுக்கான விதிமுறைகள்: எளிதில் பற்றி எரியக் கூடிய மூலப் பொருள்களால் தயாரிக்கப்படும் சீனத் தயாரிப்பு பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. அனுமதி பெற்ற வியாபாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை மீறி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வாங்கி வைத்திருக்கவோ, விற்கவோ கூடாது. அளவுக்கு அதிகமான பட்டாசுகளை வைத்திருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறுவர்களைப் பட்டாசு வியாபாரத்தில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தராசு, இரும்பிலான பொருள்களைக் கொண்டு பட்டாசுகளைக் கையாளக் கூடாது. பட்டாசுகளை வைத்திருப்பவர்கள் தங்களது கடைகளில் போதுமான தண்ணீரை பேரலில் நிரப்பி வைக்க வேண்டும். பட்டாசு கடை அலங்காரத்துக்கு மின்சார சீரியல் வகை பல்புகளை பயன்படுத்தக் கூடாது.
பட்டாசு கடைகளுக்கு எதிரில் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கக் கூடாது. தீயணைப்புத் துறை சிபாரிசு செய்த தீயணைப்பு சாதனங்களை சரியான முறையில் வைத்து பராமரிக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.