துறைமுகத் துறைக்குச் சொந்தமான தூர்வாரும் இயந்திரத்தைக் கொண்டு ஆண்டு முழுவதும் தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
ஆளுநர் கிரண் பேடி துறைமுகத் துறையை வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் அவர் வெளியிட்ட அறிக்கை:
துறைமுகத் துறைக்குச் சொந்தமான தூர்வாரும் இயந்திரத்தை மீன்பிடித் துறைமுகத்தில் ஆண்டு முழுவதும் நடைபெறும் தூர்வாரும் பணிக்கு பயன்படுத்த வேண்டும். இந்தச் செயல்பாடு மீனவர்கள் தங்களது படகுகளுடன் துறைமுகத்தின் முகப்புப் பகுதிக்கு வரத் தடையாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும்.
புனேவிலுள்ள மத்திய நீர், ஆற்றல் ஆராய்ச்சி மையத்தின் வழிகாட்டுதல் படி, நிலையான இயக்க நடைமுறையைப் பின்பற்றி, துறைமுகத்தை தூர்வாருதல், பராமரித்தல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.
கடற்கரை மேம்பாட்டுக்காக 2 லட்சம் கியூபிக் மீட்டர் மணலை கடற்கரையில் தெற்குப் பகுதியிலிருந்து வடக்குப்
பகுதிக்குக் கொண்டு செல்வதற்கான திட்டத்தை தயாரிக்க வேண்டும்.
இதேபோல, புதிய துறைமுக மேம்பாட்டுக்காக தயாரித்து அளிக்கப்பட்ட செயல் திட்டத்தில் தேவையான உதவிகளைப் பெற சென்னை துறைமுகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும்.
துறைமுகச் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தொழில்நுட்பப் பணியிடங்களில் காலியாக உள்ள இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிறைவு செய்வதுடன், காலியாக உள்ள துறைமுகத் துறை இயக்குநர் பணியிடத்தையும் நிரப்ப வேண்டும்.
சாகர்மாலா திட்டத்தின் கீழ், ஐஐடி அளித்த சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான மதிப்பீடு அடிப்படையில், செயல் விளக்கம் அளிக்க வேண்டும். பழைய துறைமுகப் பகுதிகளில் வாகன நிறுத்துமிடத்துக்கு கட்டணம் நிர்ணயிக்க பரிசீலித்து, அதற்கு இணைய முறையில் ஒப்பந்தப் புள்ளி கோர வேண்டும். துறைமுகத் துறை சட்ட உதவிக்கு சட்ட செயலருக்கு வேண்டுகோள் விடுக்கலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.