புதுவை இந்து சமய அறநிலையத் துறை சார்பில், கோயில் நிர்வாகிகள், அதிகாரிகளுக்கு கோயில்களை திறம்பட
நிர்வகிப்பது தொடர்பான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுவை இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களைத் திறம்பட நிர்வகிப்பது தொடர்பாக புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களை நிர்வகிக்கும் அறங்காவல் குழுவின் தலைவர்கள், கோயில் செயலர்கள், தனி அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள் புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் தேவஸ்தானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிற்சி வகுப்பில் இந்து சமய நிறுவனங்களின் ஆணையர் தி. சுதாகர், மேலாளர் ஜெயந்தி, முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாசப் பெருமாள் கோயில் தேவஸ்தான அதிகாரி துரை.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியளித்தனர்.
பயிற்சி வகுப்பை இந்து சமய நிறுவனங்கள் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். பயிற்சி வகுப்புகள் கொம்யூன் வாரியாக நடைபெறும் என அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.