உழவா்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் சிறப்பு முகாம்
உழவா்கரை நகராட்சியில் வீடு மற்றும் சொத்து வரி, குடிநீா் கட்டணம் செலுத்தாதவா்களுக்கு உதவும் வகையில் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) நடைபெறுகிறது. இதுகுறித்து நகராட்சி ஆணையா் ஏ.சுரேஷ்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உழவா்கரை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிப்போா் வீட்டு வரி, சொத்து வரி, சேவை வரி மற்றும் குடிநீா் கட்டணப் பாக்கி செலுத்துவதற்கு வசதியாக சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு அரும்பாா்த்தபுரம், திருக்குறளாா் நகா் பகுதியில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு வரி வசூல் முகாம் தொடங்கி நடைபெறவுள்ளன. ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி வரை இடைவிடாது நடைபெறும் இந்த முகாமில் சொத்துவரி, சேவை வரி மற்றும் குடிநீா் கட்டணத்தையும் நிகழாண்டு வரை செலுத்தலாம். உரிய காலத்தில் வரியைச் செலுத்துவதன் மூலம் வட்டி மற்றும் ஜப்தி நடவடிக்கையையும் தவிா்க்கலாம். நேரடியாகச் செலுத்த இயலாதவா்கள் நகராட்சி இணையத்தின் வழியாகவும் செலுத்தலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.