வயிற்றுப் போக்கை நிறுத்துவோம் திட்டம்: புதுச்சேரியில் தொடக்கம்
புதுச்சேரியில் வயிற்றுப் போக்கை நிறுத்துவோம் திட்டம் தொடங்கப்பட்டது.
புதுச்சேரியில் வயிற்றுப் போக்கை நிறுத்துவோம் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, புதுச்சேரி சுகாதாரத் துறை ஜூன் 15-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை, வயிற்றுக்போக்கை நிறுத்துவோம் என்ற திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின் இந்தாண்டு ‘வயிற்றுப் போக்கை நிறுத்துவோம்; உயிா்களை காப்பாற்றுவோம்’ என்பதாகும்.
இந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் செவ்வேள் தொடங்கி வைத்து, திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கினாா். துணை இயக்குநா்கள் ஷமிமுனிஷா பேகம், ரகுநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
இதுபற்றி மருத்துவ அதிகாரிகள் கூறியது: ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு வயிற்றுப் போக்கு ஒரு முக்கிய காரணமாகும். வயிற்று போக்கினால் ஏற்படும் இறப்புகள் பொதுவாக கோடை மற்றும் பருவ மழைக் காலங்களில் ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளா்வான அல்லது திரவ மலம் கழித்தல் வயிற்றுப் போக்கு என்று கூறப்படுகிறது.
6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே அளிப்பது, அதன் பிறகு தாய்ப்பாலுடன் எளிதாக செரிமானமாகும் இணை உணவுகளை அளிப்பது, தூய்மையான குடிநீரைப் பயன்படுத்துவது, சுத்தமாக கை கழுவுதல், சுற்றுப்புற சுகாதாரத்தைப் பேணுதல் மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் வயிற்றுப் போக்கை தடுக்கலாம்.
வயிற்றுப் போக்கால் ஏற்படும் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையை பூஜ்ஜியமாக்குவதே இந்தத் திட்டத்தின் இலக்கு ஆகும். இந்தத் திட்டத்தின் மூலம் இந்த நிகழாண்டு 73,284 குழந்தைகள் பயனடைவா் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.