முகப்பு
புதுச்சேரி

‘நல்ல செய்தி’ காத்திருக்கிறது: அதிமுக எம்எல்ஏக்களிடம் எடப்பாடி பழனிசாமி

அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை

Updated On : 8 மே 2026, 4:53 am IST
எடப்பாடி பழனிசாமி - PTI
பகிர்:

புதுச்சேரி தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏக்களுடன் வியாழக்கிழமை இரவு அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது, வரும் நாள்களில் நல்ல செய்தி காத்திருக்கிறது என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் காணப்படும் நிலையில், அதிமுக புதிய எம்எல்ஏக்களில் பலர் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதிக்கு புதன்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டனர்.

புதுச்சேரி பூர்ணாங்குப்பம் அருகே புதுக்குப்பம் பகுதியில் உள்ள விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் 29 பேருக்கு புதன்கிழமை இரவு தங்க இட வசதி அளிக்கப்பட்டது. வியாழக்கிழமை காலை மற்றொரு எம்எல்ஏ இங்கு வந்து சேர்ந்தார். இதையடுத்து பக்கத்து வளாகத்தில் உள்ள மற்றொரு சொகுசு விடுதிக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் வியாழக்கிழமை மாற்றப்பட்டனர்.

Advertisement

எம்எல்ஏக்கள் ஓ.எஸ். மணியன் (வேதாரண்யம்), தளவாய் சுந்தரம் (கன்னியாகுமரி), எம்எல்ஏ மோகன்(பண்ருட்டி), சொரத்தூர் ராஜேந்திரன் (நெய்வேலி), அருண்மொழி தேவன் (புவனகிரி), அக்ரி. கிருஷ்ணமூர்த்தி(கலசபாக்கம்), வெங்கடாசலம் (மேட்டூர்) உள்ளிட்டோர் உள்ளனர். மற்றொரு தனியார் சொகுசு விடுதியில் சி.வி. சண்முகம் எம்.பி. தங்கியிருந்தார். இதற்கிடையில், மயிலம் தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட, மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் திடீரென வியாழக்கிழமை தில்லி சென்றார்.

எடப்பாடி ஆலோசனை: இந்நிலையில், புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள பூரணாங்குப்பத்தை அடுத்த புதுக்குப்பம் தனியார் சொகுசு விடுதிக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை இரவு வந்தார். அவருடன் கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர், அன்பழகன் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகளும் வந்தனர்.

இதையடுத்து, அங்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இரவு 7.30 மணிக்குத் தொடங்கி 8.10 மணி வரை நடைபெற்றது. "பொறுத்திருங்கள். நல்லதே நடக்கும்' என்று அதிமுக எம்எல்ஏக்களிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், எம்எல்ஏக்களிடம் கையொப்பம் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

7 நாள்களுக்கு...: பின்னர் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் மட்டும் எடப்பாடி பழனிசாமியுடன் புறப்பட்டுச் சென்றனர். மற்ற எம்எல்ஏக்கள் அனைவரும் அந்த சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஏழு நாள்களுக்கு சொகுசு விடுதியில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த விடுதியைவிட்டு யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கூட்டம் முடிந்த பின்னர் எடப்பாடி பழனிசாமி காரில் சென்னை புறப்பட்டார். அப்போது அவரை செய்தியாளர்கள் சூழ்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பியும், கார் கண்ணாடியை திறக்காமல் சென்று விட்டார்.

அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியது குறித்து புதுச்சேரி மாநில அதிமுக செயலர் ஆ.அன்பழகன் கூறியது:

புதிய எம்எல்ஏக்களிடம் பேசிவிட்டு எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். தவெக தலைவர் விஜய்க்கும் அதிமுகவுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. இதை முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளார்.

பதவிக்காக காங்கிரஸார் விஜய் கட்சிக்கு ஆதரவு தருகின்றனர். இது சந்தர்ப்பவாத ஆதரவு. திமுக ஆதரவுடன்தான் காங்கிரஸôர் வென்றுள்ளனர். அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்ற காங்கிரஸாரின் பதவி ஆசை, தமிழக அரசியலைப் புரட்டிப் போடும் சூழலை உருவாகியது. அதைத் தடுக்கும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.