இபிஎஸ் எங்களை நீக்கியது செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! எஸ்.பி. வேலுமணி
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தரப்பு பேட்டி...
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட 22 எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் நடவடிக்கை எடுக்கக்கோரி பேரவைத் தலைவரிடம் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் இன்று கடிதம் அளித்துள்ளனர்.
நடந்து முடிந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தோல்வியைத் தழுவியது. இதனால் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். இதனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி, எஸ்.பி. வேலுமணி அணி என இரண்டாக பிளவுபட்டுள்ளது. எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
இந்நிலையில் தங்களுக்கு எதிரான தரப்பினரை தகுதி நீக்கம் செய்யக்கோரி இரு தரப்பினருமே பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்துள்ளனர்.
Advertisement
இந்நிலையில் இன்று மீண்டும் எடப்பாடி பழனிசாமி உள்பட 22 எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் நடவடிக்கை எடுக்கக்கோரி பேரவைத் தலைவரிடம் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் கடிதம் அளித்துள்ளனர்.
இபிஎஸ் உட்பட 22 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொறடா உத்தரவை மீறி இருக்கிறார்கள். கொறடா உத்தரவை மீறியவர்கள் மீது கட்சித்தாவல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவைத் தலைவரிடம் புகார் கொடுத்துள்ளதாக செய்தியாளர்களுடன் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
"கட்சியின் உறுப்பினர்களை இபிஎஸ் நீக்கியது செல்லாது, நீக்கியதாக சொல்லப்பட்டவர்கள் அப்படியே பொறுப்புகளில் தொடர்வார்கள். கட்சியில் விரிசல் ஏற்பட்டால் பொதுச்செயலாளர் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. யாரையும் நீக்குவதோ சேர்ப்பதோ செல்லாது. பொதுக்குழுவை கூட்டி தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க வேண்டும்" என்று எஸ்.பி. வேலுமணி கூறினார்.
அதிமுக இரு அணிகளாகப் பிரிந்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.