இபிஎஸ்ஸுடன் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு! சிவி சண்முகம் வரவில்லை!
இபிஎஸ்ஸுடன் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு பற்றி...
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து, சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அதிமுகவில் இபிஎஸ், எஸ்.பி. வேலுமணி என இரண்டாகப் பிரிந்தது.
எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக இரு அணியினரும் சட்டப்பேரவைத் தலைவரைச் சந்தித்து மனு அளித்திருந்தனர்.
பின்னர் பல்வேறு அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு, எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த 5 எம்எல்ஏக்கள் இபிஎஸ் தரப்புக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் 4 எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
தற்போது எஸ்.பி. வேலுமணியில் 16 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் அவர்கள் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அதிமுகவில் மீண்டும் இணையவுள்ளதாகத் தெரிகிறது.
இபிஎஸ், எஸ்.பி. வேலுமணி என இரு அணிகளும் தனித்தனியே இன்று காலை ஆலோசனை மேற்கொண்ட நிலையில் தற்போது சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் வந்துள்ளனர்.
தாங்கள் செய்தது தவறு என எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் கடிதம் அளிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல சட்டப்பேரவைத் தலைவரிடம் இரு அணிகளும் அளித்த மனுக்கள் வாபஸ் பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
'இனி நமக்குள் பிரிவில்லை' என அதிமுக ஐடி பிரிவும் இன்று காலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.