'இனி நமக்குள் பிரிவில்லை' இபிஎஸ் - எஸ்.பி. வேலுமணி அணி இணைகிறது?
இபிஎஸ் - எஸ்.பி. வேலுமணி அணி இணைவது தொடர்பாக அதிமுக ஐடி விங் பதிவு...
அதிமுகவில் பல்வேறு கட்ட பேச்சுவார்தைகளுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி இணைவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக ஐடி விங் பிரிவு இதனை உறுதிப்படுத்தும் வகையில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எதிராக எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து, சட்டப்பேரவையில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்து தற்போதைய அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
Advertisement
Advertisement
இந்நிலையில் எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவாக இருந்த ஆற்காடு எம்எல்ஏ சுகுமார், அந்தியூர் எம்எல்ஏ ஹரிபாஸ்கர் உள்பட 5 எம்எல்ஏக்கள் இபிஎஸ் தரப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அதேபோல எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த 4 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். இது எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
தொடர்ந்து இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையில் சுமூக முடிவு எட்டப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே அதிமுகவின் ஐடி விங், இரு அணிகளும் இணைவது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில்,
"எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “ - அம்மா (ஜெயலலிதா)
கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!
இனி நமக்குள் பிரிவில்லை... இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை..
நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே! நாளை நமதே! தமிழ்நாடும் நமதே!" என்று பதிவிடப்பட்டுள்ளது.
இதனால் அதிமுகவில் இரு அணிகளும் இணைவது உறுதியாகியுள்ளது.