'இனி நமக்குள் பிரிவில்லை' - அதிமுக ஐடி விங்! இபிஎஸ் - எஸ்.பி. வேலுமணி அணி இணைகிறது?
இபிஎஸ் - எஸ்.பி. வேலுமணி அணி இணைவது தொடர்பாக அதிமுக ஐடி விங் பதிவு...
அதிமுகவில் பல்வேறு கட்ட பேச்சுவார்தைகளுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி இணைவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுக ஐடி விங் பிரிவு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து, சட்டப்பேரவையில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இதனால் எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
பின்னர் பல்வேறு அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு, எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த ஆற்காடு எம்எல்ஏ சுகுமார், அந்தியூர் எம்எல்ஏ ஹரிபாஸ்கர் உள்பட 5 எம்எல்ஏக்கள் இபிஎஸ் தரப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அதேபோல எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 4 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர். இது எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
தொடர்ந்து இரு அணிகளும் இணைவதற்கு பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையில், சுமுக முடிவு எட்டப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பினரும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே அதிமுகவின் ஐடி விங், இரு அணிகளும் இணைவது குறித்து எக்ஸ் பக்கத்தில்,
"எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “ - அம்மா (ஜெயலலிதா)
கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!
இனி நமக்குள் பிரிவில்லை... இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை..
நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே! நாளை நமதே! தமிழ்நாடும் நமதே!" என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய விடியோ ஒன்றையும் இணைத்து பதிவிட்டுள்ளது.
இதனால் அதிமுகவில் இரு அணிகளும் இணைவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வீட்டிற்குச் சென்ற கே.சி. வீரமணி, 'நாங்கள் ஒன்றாக இணைந்துவிட்டோம்' என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
EPS, S.P. Velumani team joined again after several talks in ADMK
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.