அதிமுகவிலிருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டது! பதவி ஆசை இல்லை! எஸ்.பி. வேலுமணி
அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்துவிட்டதாக எஸ்.பி. வேலுமணி அறிவிப்பு...
அதிமுகவில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டதாகவும், இரு அணிகளும் ஒன்றிணைந்துவிட்டதாகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புதன்கிழமை தெரிவித்தார்.
அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி என இரு அணிகளாகப் பிரிந்த நிலையில் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு தற்போது இரு அணிகளும் ஒன்றிணைந்துள்ளது.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி. வீரமணி கே.பி. அன்பழகன், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நேரில் சென்று, கொறடாவின் உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவளித்ததற்கு வருத்தம் தெரிவித்து, முறைப்படி மன்னிப்பு கடிதம் வழங்கினர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை இபிஎஸ் தரப்பு கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், எஸ்.பி. வேலுமணி தரப்பு கொறடா சி. விஜயபாஸ்கரும் நேரில் சந்தித்தனர்.
இருவர் தரப்பிலும் நடவடிக்கை கோரி வழங்கப்பட்ட கடிதங்களை திரும்பப் பெறுவதாக பேரவைத் தலைவரிடம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:
"தேர்தலில் தோல்வியைச் சந்தித்த பிறகு சில கருத்துகளை நாங்கள் தெரிவித்தோம். மக்கள் செல்வாக்கு இருந்த காரணத்தால் சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தோம். இந்த விவகாரத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் 25 பேர் மீதும், எங்கள் தரப்பில் 22 பேர் மீதும் தகுதி நீக்க நடவடிக்கை கோரி கடிதம் வழங்கியிருந்தோம். இன்று பேரவைத் தலைவரை சந்தித்து எங்கள் கடிதத்தை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளோம்.
எங்களுக்குள் கருத்து வேறுபாடுதான். எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று தொடர்ந்து கூறி வருகிறோம். கட்சியின் தோல்வியை ஆராய வேண்டும், பொதுக்குழுக் கூட்டம் கூட்ட வேண்டும் என்று கருத்து தெரிவித்தோம். பொதுச் செயலாளரும் ஒன்றொன்றாக நிறைவேற்றுவதாக தெரிவித்தார்.
நாங்கள் அனைவரும் ஒரே கட்சியில்தான் இருக்கிறோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடுதான், பிளவு கிடையாது. கருத்து வேறுபாடு நீங்கிவிட்டது. அதிமுக வலுவோடு செயல்படும். இந்த கட்சி எங்கள் உயிர். நாங்கள் பதவிக்கு ஆசைப்படவில்லை. இதனை ஆளுங்கட்சியும் உறுதி செய்துவிட்டது.
சி.வி. சண்முகமும் எங்களுடன் ஒற்றுமையுடன்தான் இருக்கிறார்.” எனத் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பின் போது, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மட்டும் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.