முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் வழங்க குழந்தைகள் ஆணையம் ஆலோசனை

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியது.

Updated On : 8 மே 2026, 6:48 am IST
நாப்கின்
பகிர்:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியது.

புதுச்சேரி மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவா் ஆா். சிவராமன் தலைமையில் ஆணைய அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆணையத்தின் உறுப்பினா்கள் மற்றும் புதுச்சேரி அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இயக்குநா் மருத்துவா் செவ்வேல் மற்றும் துணை இயக்குநா்கள் பங்கேற்றனா்.

உச்சநீதிமன்றம் உத்தரவின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நகா்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து அரசு, தனியாா் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

Advertisement

இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள், நிதி ஒதுக்கீடு, விநியோக முறை மற்றும் கண்காணிப்பு நெறிமுறை குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆணையம் கலந்தாலோசித்தது.

பள்ளிக் குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் கல்வி உரிமையை உறுதி செய்யும் வகையில் இத்திட்டத்தைக் காலதாமதமின்றி செயல்படுத்த சுகாதாரத் துறைக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.