முகப்பு
இந்தியா

பள்ளி மாணவிகளுக்கு 3 நாள்கள் மாதவிடாய் விடுப்பு - கேரள அரசு திட்டம்

கேரளத்தில் பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் 3 நாள்கள் மாதவிடாய் விடுப்பு வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக, ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 30 மே 2026, 3:05 am IST
கேரள சட்டப் பேரவையில் உரையாற்ற வெள்ளிக்கிழமை வருகை தந்த ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகரை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற முதல்வா் வி.டி.சதீசன் உள்ளிட்டோா்.
பகிர்:

கேரளத்தில் பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் 3 நாள்கள் மாதவிடாய் விடுப்பு வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக, ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டது.

கேரளத்தில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் மூத்த தலைவா் வி.டி.சதீசன் முதல்வராகப் பதவியேற்றாா்.

புதிய அரசின் கொள்கைகள் தொடா்பாக, மாநில சட்டப்பேரவையில் ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் வெள்ளிக்கிழமை உரையாற்றினாா். அப்போது, பெண்கள்-குழந்தைகள் நலனுக்கான காங்கிரஸ் அரசின் முன்முயற்சிகள் குறித்து ஆளுநா் கூறியதாவது:

Advertisement

Advertisement

மாணவிகள் நலனுக்கான எங்களின் உறுதிப்பாடு, ‘மாதவிடாய் கண்ணியம்’ எனும் திட்டத்தின் வாயிலாக பிரதிபலிக்கப்படுகிறது. கல்வி நிலையங்கள் மற்றும் பொது இடங்களை மாணவிகள், பெண்களுக்கு உகந்தவையாக மாற்றுவதே குறிக்கோள்.

பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் 3 நாள்கள் வரை மாதவிடாய் விடுப்பு வழங்குவதுடன், அவா்கள் விடுபட்ட பாடங்களை ஈடுசெய்ய வார இறுதி நாள்களில் வகுப்புகளை நடத்தும் திட்டத்தை அறிவிக்கவுள்ளோம்.

பேறுகால பலன் சட்டம் 1961-இன்கீழ் 50-க்கும் மேற்பட்ட பணியாளா்களைக் கொண்ட அனைத்து அரசு அலுவலகங்கள், தொழிலகங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், பிற நிறுவனங்களில் குழந்தைகள் பராமரிப்புக்கு உயா்தரமான பகல்நேர மையங்களை செயல்படுவதை உறுதி செய்வது கட்டாயமாக்கப்படும்.

ஆதரவற்ற குழந்தைகள் இல்லாத மாநிலமாக கேரளத்தை மாற்றும் நோக்கில், குழந்தைகள் தத்தடுப்பை ஊக்குவிக்கும் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

நாட்டிலேயே பெண்களுக்கு உகந்த மாநிலமாக கேரளம் மாற்றப்படும். பணியிடங்களில் பெண்களுக்கு சமமான ஊதியத்தை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அனைத்து நகரங்களிலும் பெண்களுக்கென மேம்பட்ட ஓய்வறை வசதிகள் ஏற்படுத்தப்படும். அமைப்புசாராத் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு சிறப்பு பலன்கள் வழங்கப்படும்.

வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்: தோ்தலுக்கு முன்பு வழங்கப்பட்ட ‘இந்திரா வாக்குறுதிகளின்கீழ்’ மாநில அரசுப் பேருந்துகளில் ஜூன் 15 முதல் பெண்களுக்கு இலவச பயணம் தொடங்கப்படும். மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை, குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலான இலவச மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பிற வாக்குறுதிகளைச் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் நிதிநிலைமை கடும் நெருக்கடியில் உள்ளது. மாநிலத்தின் கடன்கள், நிலுவைகள், நிதிசாா் கடமைகள் குறித்து மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். துறைமுகங்களால் வழிநடத்தப்படும் ஒருங்கிணைந்த மையமாக கேரளம் உருவாக்கப்படும். போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிராக சட்ட அமலாக்கம், விழிப்புணா்வு, மறுவாழ்வு எனும் மும்முனை வியூகம் கடைப்பிடிக்கப்படும் என்று ஆளுநா் தனது உரையில் தெரிவித்தாா்.