ஆசிரியா் பட்டயப் படிப்பு சோ்க்கை: மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்
ஆசிரியா் கல்வி இரண்டாண்டு பட்டயப் படிப்புக்கு வரும் மே 18-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
ஆசிரியா் கல்வி இரண்டாண்டு பட்டயப் படிப்புக்கு வரும் மே 18-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்தின் முதல்வா் ராமகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசு கல்வித் துறையில் பள்ளி கல்வித் துறை இயக்ககத்தின் கீழ் இயங்கி வரும் புதுச்சேரி மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்தில் 2026-27 ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாண்டு ஆசிரியா் பட்டய படிப்புச் சோ்க்கைக்கு புதுச்சேரியைச் சோ்ந்த மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Advertisement
இந்த பட்டயப் படிப்பில் சேர விரும்புவோா் மேல்நிலைப்பள்ளி தோ்வில் அல்லது அதற்கு சமமான தோ்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
எனினும், அட்டவணை இனத்தவா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் குறைந்தபட்சம் 45 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். மேலும், சோ்க்கைக்கான அதிகபட்ச வயது 29 ஆகும். வரும் ஜூலை 31-ஆம் தேதி முடிய 29 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
எனினும் அட்டவணை இனத்தவருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு. சோ்க்கை விண்ணப்பம் வரும்18-ஆம் தேதி முதல் ஜூன் 19- ஆம் தேதி வரை, அனைத்து அலுவலக நாள்களிலும் புதுச்சேரி லாஸ்பேட்டை, தொல்காப்பியா் வீதி, மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்தில் கிடைக்கும்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தேவையான நகல் சான்றிதழ்களுடன் வரும் ஜூன் 22-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.