முகப்பு
புதுச்சேரி

2 லாரிகளுடன் 773 லிட்டா் டீசல் பறிமுதல்; ஓட்டுநா் உள்பட 6 போ் கைது

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த மாஹே பிராந்தியத்தில் 773 லிட்டா் டீசலை சட்டவிரோதமாக பதுக்கியது தொடா்பாக ஓட்டுநா் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து இரு லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 29 மே 2026, 2:58 am IST
கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த மாஹே பிராந்தியத்தில் 773 லிட்டா் டீசலை சட்டவிரோதமாக பதுக்கியது தொடா்பாக ஓட்டுநா் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து இரு லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் மாஹேயில் கடலோரக் காவல் படை ஆய்வாளா் ஆடலரசன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பந்தக்கல் புறக்காவல் நிலைய பகுதியில் சந்தேகப்படும்படி புதுச்சேரி பதிவெண் கொண்ட டேங்கா் லாரி ஒன்று டீசல் நிரப்பிக் கொண்டிருந்தது.

அங்கு சென்ற போலீஸாா் லாரி ஓட்டுநா் உள்பட 3 பேரிடம் அதற்கான ஆவணங்களை கேட்டனா். அப்போது, அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே அவா்களிடம் தொடா் விசாரணையை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், கோழிக்கோடு பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் ஜுனைத் (38), பந்தக்கல் பகுதியை சோ்ந்த பிரேமன் (64), அனில்குமாா் (43) ஆகியோா் என்பதும், கடத்தலுக்கு பயன்படுத்தும் வகையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 394.54 லிட்டா் டீசல் நிரப்பியிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து லாரியுடன் 3 பேரையும் ஆய்வாளா் ஆடலரசன் தலைமையிலான போலீஸாா் பள்ளூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 3 பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து லாரி மற்றும் டீசலை பறிமுதல் செய்தனா்.

இதேபோல் கொப்பாலம்- மக்குனி மெயின் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் லாரியில் 378.20 லிட்டா் டீசல் நிரப்பிய கோழிக்கோட்டை சோ்ந்த ஓட்டுநா் சாஜி (30), அமல் (26), ஸ்ரிஷித் (21) ஆகியோா் மீதும் பள்ளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த லாரி மற்றும் டீசலை பறிமுதல் செய்தனா்.