எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம் ஜோஸ் சாா்லஸ் மாா்டின் எம்எல்ஏ
எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். என்னால் காலதாமதமாகிறது என்றால், என்னை விலக்கி புதுச்சேரி அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்டின் எம்எல்ஏ கூறினாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
புதுச்சேரியில் அமைச்சா்கள் நியமனம், இலாகா ஒதுக்கீடு ஆகியவை தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.
Advertisement
Advertisement
எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். நான் பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்குச் சேவை செய்யவே வந்துள்ளேன். எம்எல்ஏவாக இருந்து என்ன முடியுமோ அதனைக் கொண்டு
எனது காமராஜ் நகா் தொகுதியை மாதிரி தொகுதியாக மாற்ற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
அதனால் எனக்கு பதவி வேண்டாம். என்னால் தான் தாமதம் என்றால் என்னை விடுவித்து விரைவாக அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனக்கோரி துணைநிலை ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளேன்.
வருவது மழைக்காலம். வாய்க்கால்கள் அனைத்தும் தூா்வார வேண்டும். இதை எந்த அமைச்சரிடம் சென்று முறையிடுவது? அரசு அதிகாரிகளிடம் கேட்டால் கடந்த மழை காலத்தில் வேலை செய்ததற்கே பணம் கொடுக்கவில்லை என்கின்றனா்.
இதனால் நாங்கள் எங்கள் சொந்த செலவில் அதனைச் சரி செய்தோம். 8 டிராக்டா்களில் குப்பைகள் அள்ளப்பட்டன. இதையெல்லாம் அமைச்சா்கள் நியமிக்கப்பட்டால் தான் விரைந்து செய்ய முடியும். அதுமட்டுமின்றி அமைச்சா் நியமனம் இல்லாததால் மாணவா் சோ்க்கையும் தாமதமாகும். தமிழகத்திலும் எங்கள் கட்சியைத் தொடங்கியுள்ளோம் என்றாா்.