தீபாவளிக்கு பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்
விழுப்புரத்தில் தீபாவளிக்கு ஜவுளி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவை வாங்க ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் குவிந்ததால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விழுப்புரத்தில் தீபாவளிக்கு ஜவுளி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவை வாங்க ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் குவிந்ததால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி செவ்வாய்க்கிழமை (நவ.6) கொண்டாடப்பட உள்ளது.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோர் குடும்பத்துடன் பொருள்கள் வாங்க கடை வீதியில் திரண்டனர்.
இதன் காரணமாக விழுப்புரம் எம்.ஜி.சாலை, நேருஜி சாலை, கே.கே.சாலை, திரு.வி.க. சாலை, காமராஜர் சாலை, திருச்சி சாலை ஆகிய இடங்களில் உள்ள ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலை மோதியது.
அதேபோன்று பட்டாசுக் கடைகள், இனிப்புக் கடைகள், மளிகைக் கடைகளிலும் மக்கள் குவிந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் கடைகளுக்கு வந்ததால், நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பாதுகாப்பு கருதி போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கே.கே. சாலை சந்திப்பு, புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிப்புப் பணி மேற்கொண்டனர்.
ரயில்களில் கூட்டம்: தீபாவளிப் பண்டிக்கைக்கு சென்னை உள்ளிட்ட ஊர்களில் இருந்து நீண்ட தொலைவில் உள்ள சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில்களில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் அதிகளவில் பயணித்தனர். விழுப்புரம் வழியாக தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. விழுப்புரத்தில் இருந்து ஏராளமனோர் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏறினர்.
ஆனால், முன்பதிவில்லாத பெட்டிகளில் போதிய இடம் இல்லாததால் படிகளிலும், சரக்குப் பெட்டிகளிலும் பயணித்தனர்.
இதேபோன்று, விழுப்புரம் பேருந்து நிலையத்திலும் கூட்டம் அலை மோதியது. வெளியூர்களில் இருந்து விழுப்புரத்துக்கு வந்த பொதுமக்கள் அங்கிருந்து, தங்களது சொந்த ஊர்களுக்கு வேறு பேருந்துகளை பிடித்து பயணித்தனர். மேலும், விழுப்புரம் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பொருள்கள் வாங்க விழுப்புரத்துக்கு வந்து சென்றதால் புதிய பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.