திமுகவின் மறுபிரதியே தவெக! பாஜக விமர்சனம்
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தவெக அரசை பாஜக கடுமையாக விமர்சித்திருப்பது பற்றி...
ஹிந்துக்களின் உணர்வுகளை அவமதிப்பதில் முந்தைய திமுகவின் மறுபிரதியாகவே தவெக அரசும் செயல்படுவதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன் புதன்கிழமை கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், முந்தைய திமுக அரசு தீபம் ஏற்ற மறுத்தது. இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசும் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து சி.ஆர். கேசவன் பேசியதாவது:
Advertisement
Advertisement
”கோடிக்கணக்கான ஹிந்து பக்தர்களின் உணர்வுகளை அவமதிப்பதிலும், அவர்கள் தங்கள் சநாதன தர்மத்தை பின்பற்றுவதை தடுப்பதிலும், ஜோசப் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு, முந்தைய திமுக அரசின் மறுபிரதியாகவே செயல்படுகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசின் முடிவானது, பாரபட்ச அரசியல் மற்றும் மதரீதியான திருப்திப்படுத்தும் அரசியலை முன்னெடுக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கும் அரசிடம் இருந்து இதைவிட வேறெதை எதிர்பார்க்க முடியும்?
ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் பாரபட்சம் கொண்டது என்பதும், ஹிந்துக்களுக்கு எதிரானது என்பதும் அனைவரும் அறிந்ததே. சோம்நாத் கோயில் புனரமைப்பை எதிர்த்த நேரு காங்கிரஸும், அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழாவைக் கேலி செய்த ராகுல் காங்கிரஸும் ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள்.
தவெக அரசு ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் மாநிலச் சின்னமே கோயில் கோபுரம்தான். திருப்பரங்குன்றம் கோயிலில் பாகுபாடான அணுகுமுறையைக் கையாண்டதற்காக முந்தைய திமுக அரசு எத்தகைய கடும் எதிர்ப்பை சந்தித்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
துரதிர்ஷ்டவசமாக, தவெக அரசும் திமுகவின் அதே பிளவுபடுத்தும் தவறான பாதையைப் பின்பற்றுகிறது. வரும் நாள்களில் தமிழ்நாட்டு மக்கள் தவெகவுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்தார்.
TVK govt "rehashed duplicate" of DMK, disrespecting Hindu sentiments: BJP
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.