அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
உளுந்தூர்பேட்டை வட்டம், எலவனாசூர்கோட்டையில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலின் மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை வட்டம், எலவனாசூர்கோட்டையில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலின் மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலுக்கு 2012-ஆம் ஆண்டு மஹா கும்பாபிஷேகம் செய்தனர். கோயிலை மறுபடியும் புதுப்பித்து பக்தர்கள் அமர்வதற்கு புதிய மண்டபம் அமைத்தும், பரிவார மூர்த்திகளை புதுப்பித்தும் மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி, பணிகள் தொடங்கி தற்போது நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து, கோயில் கும்பாபிஷேக பணிகள் சனிக்கிழமை முதல் தொடங்கின.
அன்று காலை சிறப்பு ஹோமம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.ஞாயிற்றுக்கிழமை காலை கோ-பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. நான்காம் கால யாக பூஜைகள் மற்றும் மஹாபூர்ணாஹுதி பூஜையும் நடைபெற்றது.
குருஜி ஸ்ரீவெங்கட்ராம்ஜி சுவாமிகள் தலைமையில் சாமிநாத சாஸ்திரிகள், சண்முக சொர்ண சிவாச்சாரியார், வடபாதி சித்தர் ஆகியோர் கோபுர கலசம் மற்றும் பரிவார மூர்த்திகள், மூலவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 8.50 மணிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர், பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டு, அன்னதானம் நடைபெற்றது.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 1000-த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், உபயதாரர்கள், பூசாரிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.