விழுப்புரத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் 6 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சித்தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அழகப்பன் மனைவி வள்ளியம்மை (70). இவர், திங்கள்கிழமை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில்
கலந்துகொள்ள வந்தார்.
திருமண நிகழ்ச்சி முடிந்து அன்று மாலை ஊருக்குச் செல்ல பழைய பேருந்து நிலையம் சென்றார். அங்கு, வள்ளியம்மை நகைகள் அணிந்திருப்பதை நோட்டம் விட்ட பெண், அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது, நகைகளை அணிந்து கொண்டு பேருந்தில் பயணித்தால், யாராவது பறித்துச் சென்று விடுவார்கள். அதனால், நகைகளை கழற்றி பாதுகாப்பாக பையில் வைக்குமாறு கூறினாராம்.
இதை நம்பிய வள்ளியம்மை தான் அணிந்திருந்த தங்க வளையல்கள், சங்கிலி உள்ளிட்ட 6 பவுன் நகைகளை கழற்றி பையில் வைத்தார்.
பின்னர், பேருந்தில் ஏறி பையைப் பார்த்தபோது, நகைகளைக் காணவில்லையாம். திருடுபோன நகைகளின் மதிப்பு ரூ.1.20 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து வள்ளியம்மை விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.