உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் பிரச்னை: பெண்கள் மறியல்
உளுந்தூர்பேட்டை அருகே மேலப்பாளையம் கிராமத்தில் குடிநீர் வழங்கக் கோரி, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சனிக்கிழமை காலை மறியலில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை அருகே மேலப்பாளையம் கிராமத்தில் குடிநீர் வழங்கக் கோரி, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சனிக்கிழமை காலை மறியலில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை ஒன்றியம், எலவனாசூர்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட மேலப்பாளையம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனால் அத்தியாவசியத் தேவைக்கு போதிய தண்ணீர் கிடைக்காததால், மேலப்பாளையம் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். எனவே, இந்தக் கிராமத்துக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரக் கோரி, உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலத்தில் கோரிக்கை விடுத்தனர். எனினும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால் அதிருப்தியடைந்த மேலப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், எலவனாசூர்கோட்டை - திருக்கோவிலூர் சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் எலவனாசூர்கோட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அந்தக் கிராமத்துக்கு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால், மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.