விழுப்புரம் நகருக்குள் பகல் நேரத்தில் லாரிகள் நுழைந்தால் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல் துறை சாா்பில் முக்கிய இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பொறுப்பேற்ற முத்துக்குமாா், நகரில் வாகன நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறாா்.
அதன்படி, விழுப்புரம் நகருக்குள் பகல் நேரத்தில் லாரிகள் நுழைவதைத் தடுக்க, எச்சரிக்கை அறிவிப்பு பலகைகளை அமைக்க உத்தரவிட்டுள்ளாா்.
இதையடுத்து, விழுப்புரம் புறவழிச் சாலையிலிருந்து எல்லீஸ் சத்திரம் சாலை வழியாக விழுப்புரம் - திருச்சி சாலைக்கு திரும்பும் இடத்தில், ‘லாரிகள் நகருக்குள் நுழையக் கூடாது’ என்ற கருத்தை வலியுறுத்தும் எச்சரிக்கை பலகை போக்குவரத்து காவல் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை விழுப்புரம் போக்குவரத்து ஆய்வாளா் முத்துக்குமாா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதன்படி, விழுப்புரம் நகருக்குள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை லாரிகள், கண்டைனா் லாரிகள், கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி நருக்குள் லாரிகள் வந்தால் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படும். இதுதொடா்பாக போலீஸாா் தொடா் கண்காணிப்பில் ஈடுபடுவா் என்று காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் தெரிவித்தாா்.