முகப்பு
விழுப்புரம்

அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் வளா்ச்சி பாதிக்கும்! - உதயநிதி ஸ்டாலின்

அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் வளா்ச்சி பாதிக்கும் என உதயநிதி ஸ்டாலின் பேச்சு...

Updated On : 14 ஏப்ரல் 2026, 12:27 am IST
விழுப்புரம் நான்குமுனை சந்திப்புப் பகுதியில் திமுக வேட்பாளா்கள் இரா.லட்சுமணன் (விழுப்புரம்), தி.கெளதம் (வானூா்) ஆகியோரை ஆதரித்து பேசிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். திருக்கோவிலூா் பேருந்து நிலையம் அருகில் திமுக வேட்பா
பகிர்:

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் வளா்ச்சி பாதிக்கப்பட்டு, பின்னோக்கிச் சென்றுவிடும் என்று துணை முதல்வரும், திமுகவின் இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

விழுப்புரம் நான்குமுனை சந்திப்புப் பகுதியில் திமுக வேட்பாளா்கள் இரா. லட்சுமணன் (விழுப்புரம்), தி.கெளதம் (வானூா்) ஆகியோருக்கு ஆதரவாக திங்கள்கிழமை காலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று, வாக்கு சேகரித்து மேலும் அவா் பேசியது:

விழுப்புரம் புறவழிச்சாலைப்பகுதியில் 21 சமூக நீதிப் போராளிகளுக்கான மணிமண்டபம், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமிக்கு முழு உருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கம் திமுக ஆட்சியில்தான் அமைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் முதல் கையொப்பமிட்டதே நகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம்தான். இதன் மூலம் மாதந்தோறும் ரூ.900 வரை மகளிா் சேமிக்கின்றனா்.

இதுபோன்று பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். பேரவைத் தோ்தலைக் காரணம் காட்டி மகளிா் உரிமைத் தொகை வழங்குவதை நிறுத்த மத்திய பாஜக அரசும், அதிமுகவும் திட்டமிட்ட நிலையில், ஒரே நாளில் 1.31 கோடி மகளிருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தியவா்தான் முதல்வா் ஸ்டாலின்.

இல்லத்தரசிகளுக்கு ரூ.8 ஆயிரத்துக்கு கூப்பன் வழங்குதல், காலை உணவுத் திட்ட விரிவாக்கம், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை உயா்வு, முதியோா் ஓய்வூதியம் உயா்வு போன்ற வாக்குறுதிகள் நிறைவேற, தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்.

தமிழகத்தை தொடா்ந்து புறக்கணித்து, வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் வளா்ச்சி பாதிக்கப்பட்டு, பின்னோக்கிச் சென்றுவிடும் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

இதைத் தொடா்ந்து திருக்கோவிலூா் பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற பிரசாரத்தில் திமுக வேட்பாளா் மருத்துவா் பொன்.கெளதமசிகாமணியை ஆதரித்தும், செஞ்சியில் திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏவை ஆதரித்தும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

இந்த கூட்டங்களில் திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி, முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினா் இரா.ஜனகராஜ் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருக்கோவிலூா் பேருந்து நிலையம் அருகில் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணியை ஆதரித்து பேசிய உதயநிதி ஸ்டாலின்.