அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்: இபிஎஸ்
சேலத்தில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியது குறித்து...
அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரக் கூட்டம் சேலம் கோட்டை திடலில் இன்று(ஏப். 21) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:
Advertisement
கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நிகழ்ந்தது. பொதுமக்கள், சிறுமிகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் வீதியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு போதை பொருள்கள் நடமாட்டம் சட்ட ஒழுங்கு சீர்கேடு போன்றவை நிறைந்து காணப்பட்டது.
இன்றைய சூழ்நிலையில் இளைஞர்கள் மது போதை மற்றும் கஞ்சாவுக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை சீரழித்து கொண்டுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறி உள்ளது.
அதிமுக ஆட்சி வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம். தமிழகம் முழுவதும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மக்கள் படும் துயரம் குறித்து ஸ்டாலினுக்கு எந்தக் கவலையும் இல்லை, தமிழ்நாடு போதைப் பொருள்களின் கேந்திரமாக மாறி உள்ளது, எப்படிக் கொள்ளை அடிப்பது குறித்து திட்டமிட்டு திமுக அரசு செயல்படுகிறது. அனைத்துத் துறைகளிலும் திட்டம் போட்டு கொள்ளையடிக்கும் கூட்டமாக மாறி வருகிறது.
திமுக அமைச்சர் சொன்னதுபோல, அரசின் இரண்டு ஆண்டு கால ஆட்சியில் ரூ. 30 ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப்பட்டது என்றால், கடந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் எவ்வளவு கோடி கொள்ளையடித்திருக்க முடியும் என சிந்தித்துப் பாருங்கள்.
2011-ல் பிரதான எதிர்க்கட்சியாக வர முடியவில்லை. கருணாநிதி இருக்கும்போதே எதிர்க்கட்சியாககூட வர முடியவில்லை. எத்தனை தோல்வியை நீங்கள் சந்தித்து உள்ளீர்கள், பல இடங்களில் உங்களை வீழ்த்தியுள்ளோம்” என்றார்.