தே.ஜ. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் திமுக திட்டங்கள் அழிந்துவிடும்: மு.க. ஸ்டாலின்
கடலூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேசியது குறித்து...
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மகளிர் விடியல் பயணம் உள்ளிட்ட திமுகவின் திட்டங்களை அழித்துவிடுவார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 7) தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
Advertisement
''இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டுவந்துள்ளோம். திராவிட மாடலில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு திட்டமும் சூப்பர் ஹிட். அடுத்து திராவிட மாடல் 2.0 திட்டங்களை நிறைவேற்ற நீங்கள் ரெடியா?
நமது திட்டமான மகளிர் விடியல் பயணத் திட்டம், நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது. அதிமுகவும் நமது திட்டங்களையே காப்பி அடிக்கிறது.
தமிழ்நாட்டை சீரழிக்க எண்ணற்ற திட்டங்களை தேஜ கூட்டணி வைத்துள்ளது. தமிழை அழிப்பதற்காக மும்மொழித் திட்டம் கொண்டுவரத் துடிக்கிறது பாஜக.
புள்ளி விவரங்களுடன் திராவிட மாடல் திட்டங்களை என்னால் கூற முடியும். எடப்பாடி பழனிசாமியால் தன்னுடைய 10 ஆண்டுகால ஆட்சி குறித்து பேச முடியுமா? பாஜக ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தரமற்றதாகவே உள்ளது.
எடப்பாடி பழனிசாமி மட்டும் இல்லை, அவருடன் இருப்பவர்களும் தரம் தாழ்ந்து பேசி வருகின்றனர். பெண்களை மதிக்கத் தெரியாதவர்களாக அவர்கள் உள்ளனர்.
துரோகத்தின் முழு உருவமாக பழனிசாமி இருக்கிறார். கடந்த தேர்தலில் இதனால்தான் எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்தனர். கடந்த ஆண்டில் சொன்னதை எல்லாம் செய்து முடித்துவிட்டேன்.
மோடியின் பேச்சை மீறி செயல்படும் துணிவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா? விடியல் பயணத்தை நிறுத்த அவர்கள் திட்டமிடுவார்கள்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை நிறுத்துவதற்கான டிரெய்லர்தான் உதய் மின் திட்டம். தமிழை அழிப்பதற்கான திட்டம் தான் மும்மொழிக் கொள்கை.
அடுத்தவர்களின் வரிப்பணத்தை சுரண்டுவதற்கு வந்ததுதான் ஜிஎஸ்டி. மாநில மக்களே தங்கள் அரசை தேர்ந்தெடுக்கும் உரிமையை நாசம் செய்வதற்கு ஒரே நாடு ஒரே திட்டம்.
விரைவில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு கொண்டுவரப்பட்ட திட்டம்தான் தொகுதி மறு சீரமைப்பு. இதனை எல்லாம் முறியடிக்க நம்மால் மட்டும்தான் முடியும். தமிழ்நாடு டாப் கியரில் செல்ல வேண்டும் என்றால், திராவிட மாடல் ஆட்சிதான் வர வேண்டும்.
தமிழ்நாடு போதைப்பொருள் மையமானது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான். அதில் கிடைத்த பணத்தில் அதிமுக அமைச்சர்கள் திளைத்தார்கள்.
வளர்ச்சி என்பது அனைத்து மாவட்டங்களுக்குமானதாக இருக்க வேண்டும். சிதம்பரத்தில் புதிய பேருந்து நிலையம். பிச்சாவரம் சுற்றுலா மைய மேம்பாட்டுப் பணிகள், கடலூர் அண்ணா பாலத்திற்கு அருகே புதிய பாலம், சிதம்பரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் ஏரி தூர்வாறியது, திட்டக் குடியில் புதிய கால்நடை தீவின ஆலை என பல்வேறு நன்மைகள் திமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ளன'' என மு.க. ஸ்டாலின் பேசினார்.