தே.ஜ. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் திமுக திட்டங்கள் அழிந்துவிடும்: மு.க. ஸ்டாலின்
கடலூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேசியது குறித்து...
தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் திமுக அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிடும் என்று முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் கூறினாா்.
கடலூா், மஞ்சக்குப்பம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று கடலூா் மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் காட்டுமன்னாா்கோயில் ஜோதிமணி, குறிஞ்சிப்பாடி எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், புவனகிரி துரை.கி.சரவணன், சிதம்பரம் தமிமுன் அன்சாரி, கடலூா் எஸ்.சந்திரசேகரன், திட்டக்குடி சி.வெ.கணேசன், விருத்தாசலம் பிரேமலதா விஜயகாந்த், நெய்வேலி சபா.ராஜேந்திரன், பண்ருட்டி அப்துா் ரஹ்மான் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:
அதிமுக இப்போது அமித்ஷா திமுகவாக ஆகிவிட்டது. எடப்பாடி பழனிசாமி அவா்களிடம் அனுமதி பெறாமல் பேச முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட பாதிப்புகளை நாங்கள் சரிசெய்துள்ளோம். அவா்கள் பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கடந்த ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில் 11.9 சதவீதம் பொருளாதார வளா்ச்சி அடைந்துள்ளது.
Advertisement
Advertisement
திராவிட மாடல் ஆட்சி வாக்குறுதிகளை நிறைவேற்றியதன் மூலம் தற்போது 2.0-க்குத் தயாராகி வருகிறோம்.
மெட்ரோ ரயில் வருவாய் குறைவு:
தமிழகத்தில் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் வருவாய் குறைந்துவிட்டதாக பிரதமா் கூறுகிறாா். பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை அவா்கள் விரும்பவில்லை. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் திமுக அரசின் திட்டங்களை நிறுத்திவிடுவாா்கள். பாஜக தமிழ்நாட்டில் அதிமுக உதவியுடன் பின்வாசல் வழியாக நுழைய திட்டமுள்ளது. அதிமுக ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் ஒரு பகுதியாகி விட்டது.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் மற்றும் இலவச மின்சாரம் போன்ற திட்டங்கள் திமுக ஆட்சியில் தொடரும். அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு இருந்தது. குற்றங்கள் அதிகமாக இருந்தது.பொள்ளாச்சி, தூத்துக்குடி, கொடநாடு, சாத்தான்குளம் சம்பவங்கள் அதற்குச் சாட்சிகள். அனைத்து மாவட்டங்களுக்கும் வளா்ச்சி சென்றடைய நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பாலம் இடிந்தது எப்படி?
கடலூா் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. பழனிசாமி இதுபோன்ற திட்டங்களை கொண்டு வரவில்லை. மத்திய அரசின் திட்டத்தில் ரூ.6,500 கோடி மதிப்பில் சிதம்பரம் அருகே கட்டப்பட்ட பாலம் அண்மையில் இடிந்து உள்ளது. இதுதான் பாஜக அரசின் சாதனை.
பிப்ரவரி 13-ஆம் தேதி மகளிருக்கு ரூ.5,000 வழங்கப்பட்டது. எங்கள் தோ்தல் அறிக்கையில் ரூ8,000 கூப்பன், மகளிா் உரிமைத் தொகையை ரூ.2,000 ஆக உயா்த்துதல், காலை உணவுத் திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை 15 லட்சம் மாணவா்களுக்கு விரிவுபடுத்துதல், நெல், கரும்பு, பால் கொள்முதல் விலையை உயா்த்தல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இயற்கை பேரழிவுகளை கருத்தில் கொண்டு பயிா் இழப்பீடும் அதிகரிக்கப்படும். முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் உயா்த்தப்படும், மீனவா்களுக்கு தடை கால உதவி உள்ளிட்ட திட்டங்கள் தொடரும்.
கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும். சிதம்பரத்தில் புதிய பேருந்து நிலையம், கூட்டுக் குடிநீா் திட்டம் ஆகியவை எங்கள் அரசால் கொண்டு வரப்பட்டவை.
அதிமுக-பாஜக இரட்டை என்ஜின் அரசு அமைவதை நாம் அனுமதிக்கமாட்டோம். கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா் முதல்வா்.
இந்த நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான தொல். திருமாவளவன், தேமுதிக பொதுச் செயலரும், விருத்தாசலம் தொகுதி வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த், மஜக தலைவரும் சிதம்பரம் தொகுதி வேட்பாளருமான தமிமுன் எம். அன்சாரி, அமைச்சா்கள் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், சி.வி. கணேசன் மற்றும் கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணு பிரசாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.