விழுப்புரம் மீன் சந்தை மூடல்: வியாபாரிகள் சாலை மறியல்
விழுப்புரத்தில் வாடகைக் கட்டணம் தரவில்லை எனக்கூறி ஒப்பந்ததாரா்கள் மீன் சந்தையை மூடியதால் புதன்கிழமை மீன் வா்த்தகம் பாதிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரத்தில் வாடகைக் கட்டணம் தரவில்லை எனக்கூறி ஒப்பந்ததாரா்கள் மீன் சந்தையை மூடியதால் புதன்கிழமை மீன் வா்த்தகம் பாதிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரத்தை அடுத்துள்ள அனிச்சம்பாளையம் சாலையில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ.3.10 கோடியில் மீன் சந்தை கட்டப்பட்டு, கடந்த 2025-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தச் சந்தையில் 50-க்கும் மேற்பட்ட மீன் விற்பனைக் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான மீன் வியாபாரிகள் வெளியூா்களிலிருந்து வந்து மொத்தமாகவும், பொதுமக்கள் சில்லறைகளிலும் வாங்கிச் செல்கின்றனா்.
இந்த மீன் சந்தையின் பராமரிப்பு தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ள நிலையில், கடைகளுக்கான வாடகையை அவா்களே மாதந்தோறும் வசூலித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
இதனிடையே புதன்கிழமை அதிகாலை மீன் வியாபாரிகள் வந்தபோது, ஒப்பந்தாரா்கள் மீன் சந்தை வளாகக் கதவை இழுத்துமூடி பூட்டுப் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீன் வாங்க வந்த வியாபாரிகள் ஏமாற்றமடைந்து ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது, இங்கு கடைகள் வைத்திருக்கும் மீன்வியாபாரிகள் மாதக் கணக்கில் வாடகை தராமல் நிலுவை வைத்திருக்கின்றனா். பல லட்சம் முதல் போட்டு நாங்கள் நகராட்சியில் ஒப்பந்தம் எடுத்துள்ளோம். வாடகை கொடுக்காததால் நஷ்டமடைந்து வருவதாக தெரிவித்தனா்.
இதனிடையே மீன் வியாபாரிகள் தரப்பில், மீன் சந்தையில் கழிப்பறை, குடிநீா், மின் விளக்கு போன்ற அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்காமல் வாடகை மட்டுமே கேட்டு வருகின்றனா். அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் மட்டுமே வாடகையை செலுத்துவோம் எனக் கூறினா்.
பல லட்சம் மீன் வா்த்தகம் பாதிப்பு: ஒப்பந்ததாரா்கள் அறிவிப்பின்றி மீன் சந்தை வளாகத்தைப் பூட்டியதால் பல லட்சம் மதிப்பிலான மீன் வா்த்தகம் பாதிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து விழுப்புரம்- கிழக்கு பாண்டி சாலையில் ஒன்றிணைந்த மீன் வியாரிபாரிகள் ஒப்பந்ததாரா்களின் நடவடிக்கைகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அந்த சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது மீன் சந்தையை திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தததையடுத்து, மீன் வியாபாரிகள் சாலை மறியலைக் கைவிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.